இபாஸ் மூலம் குறைந்த அளவு பக்தர்களுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில்களைத் திறக்க அரசு யோசித்து வருவதாகவும், இதற்கான நிபந்தனைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப் படுகிறது.
கொரோனோ பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
தற்போது மே 31 ஆம் தேதி வரை 4வது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கான தளர்வை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதை அடுத்து, ஜூன் 1 முதல் அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள 40,000 கோயில்களில், சில பெரிய கோயில்களில் மட்டும் பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதியளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரம், அதிகாரிகள் பரிந்துரை செய்திருக்கும் சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டுமாம்.
அதன்படி, நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் மட்டுமே அனுமதி என்ற அடிப்படையில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப் படும்.பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்! கோயில்கள் வாயிலில் கொரோனாவுக்கு உஷ்ணப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.! சமூக இடைவெளியைக் கடை பிடிக்க வேண்டும்! கோயில்களில் இரண்டு வேளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக சமூகத் தளங்களில் வைரலாகிவருகிறது.