ஆம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் அனல் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரைப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், இத்தகைய வானிலை மாற்றம் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் கரையை கடந்ததால் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது, தமிழகத்திற்கு மேற்கு – வட மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதால் அனல் காற்றும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகலில் கடலோர மாவட்டங்களில் கிழக்கு – தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், அதிலுள்ள அதிகளவிலான ஈரப்பதத்தினால் புழுக்கம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலை நீடித்தாலும், அதன் பின்னர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.