சென்னை: சென்னையில் அரசு மருத்துவனையில் இருந்து கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது எதனால் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன், 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைச் சூழல் காரணமாக பலர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதனால், சிகிச்சையில் இருந்து தப்பி செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்படி, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 57 வயது நபர், நேற்று முன்தினம் (மே 28) இரவு தப்பி சென்றார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த, 63 வயது முதியவர் ஒருவரும் தப்பிவிட்டார்.
இதுவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து, 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அதில் ஒரு சிலரை போலீஸார் கண்டுபிடித்து, சிகிச்சைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூன்று பேரை தேடி வருகின்றனர்.
நோயாளிகள் தப்பி ஓட காரணம் என்று கேட்டபோது நோயாளி ஒருவர் கூறிய காரணங்கள் மிகவும் ருசிகரமாகவும், அதே நேரத்தில் வருந்தத் தக்கவையாகவும் உள்ளன.
கொரோனோ நோய் என்றால் என்னவோ பெரிது என்று நினைத்து பயந்து விட்டேன். மருத்துவமனை சென்றால் நிலைமை தலைகீழாக உள்ளது. வேளா வேளைக்கு சரியான நேரத்தில் டிபன், சோறு தந்து விடுகிறார்கள். காலை, மாலை என வேளாவேளைக்கு 5 மாத்திரைகள், கபசுர குடிநீர், சுண்டல் தந்துவிட்டு சென்று விடுகிறார்கள்.
சத்தான ஆகாரம், மாத்திரை தவிர வேறு எதுவும் இதற்கு மருந்துகள் கிடையாது. யாரும், யாருடனும் பேச முடிவதில்லை. அப்படியே 10 நாள்களுக்கு தனிமையாக இருக்க வேண்டியதுதான். ஒரு வகையில் ஜெயில் போல் அல்லவா இருக்கிறது. இதற்கு வீடே பரவாயில்லை. அதனால்தான் மருத்துவமனையி்ல் இருந்து உறவினர் வீட்டுக்குச் செல்ல தப்பி விட்டேன் என்கிறார் அந்த முதியவர்.
கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், இனி மருத்துவ மனைகளில் படுக்கை வசதி தந்து சிகிச்சை அளிப்பார்களா என்பதும் சந்தேகமே என்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
கட்டுக்கடங்காத சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், கடும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோயாளிகள் மட்டும் கொரோனாவினால் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள். ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் மருத்துவ மனைகளுக்கு செல்ல வேண்டிய தேவையே இருக்காது என்றும் நோயாளிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
- செய்திக் கட்டுரை: சதானந்தன், சென்னை