சிவகங்கையில் கொரோனா வார்டு அமைக்கும் பணியின் போது, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டதால் நோயாளிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
சிவகங்கையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏற்கனவே அம்பேத்கர் சிலை அருகே செயல்பட்டுவந்த தலைமை மருத்துவமனை காரைக்குடி பகுதிக்கு மாற்றப்பட்டது. .
இதன் காரணமாக பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் உள்ள நிலையில் ஒரு சில கட்டிடங்களில் மட்டும் மாவட்ட காசாநோய் பிரிவு, தொழுநோய் பிரிவு, சித்தமருத்துவ பிரிவு போன்றவைகள் செயல்பட்டு வருவதுடன் மற்ற கட்டிடங்கள் காலியாக உள்ளது.
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தற்சமயம் வரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே ஒரு பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதனால் சாதாரண நோய் பாதிப்புக்குள்ளாகி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததால் பழைய தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கட்டிடங்களை கொரோனா சிறப்பு சிகிச்சை பகுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வார்டின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த புதர்பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்ற போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. இதில் நல்லபாம்பு, கட்டுவிரியன், உள்ளிட்ட பாம்புகளும் பிடிபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாம்புகள் பிடிபட்டாலும் நோயாளிகள் அச்சத்துடன் உள்ளனர்.