- சொந்தக்காரர் இல்லாத கடைகள்…
- எங்கோ அல்ல… இந்தியாவில்தான்…
இங்கு ஒரு கடை உள்ளது. அதில் தேவையான பொருட்கள் எல்லாம் உள்ளன. ஆனால் விற்பதற்கு கடையின் சொந்தக்காரர் மட்டும் இருக்க மாட்டார். பின் எவ்வாறு வாங்குவார்கள்? அது ஒன்றும் சிரமமில்லை. நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொருளுக்கான விலை அங்கு போர்டில் எழுதியுள்ளது. அதன்படி பணத்தை அங்கு வைப்பதோ அல்லது ஆன்லைனில் பேமென்ட் செய்வதோ செய்து வாங்கிச் செல்கிறார்கள்.
ஒருவேளை பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என்று சந்தேகப்படுகிறார்களா? அது போல் என்றுமே நடந்தது இல்லை. இந்த கடை நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் பெயர் போனதாக உள்ளது. இந்த கடை குறித்து அறிந்தவர்கள் யாருமே ஏமாற்ற மாட்டார்கள்.
சரி.. இந்த கடை எங்குதான் உள்ளது? வெளிநாட்டில் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? அல்ல அல்ல…
நம் பாரத தேசத்தில் தான் உள்ளது. மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகில் உள்ள கிராமத்தில் இதுபோன்ற கடைகள் தென்படுகின்றன. இந்த பழக்கத்தை அங்கு ‘நாகஹா லோ டாவர்’ என்றழைக்கிறார்கள்.
வியாபாரிகள் காலையிலேயே கடைக்கு வந்து சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மீண்டும் மாலை வந்து மீதி உள்ள சாமான்களையும் பணத்தையும் எடுத்துச் செல்கிறார்கள்.
பணமோ பொருளோ அவ்வாறு வெளியில் இருந்தாலும் யாரும் திருடுவதில்லை. இந்த கடைகள் கரோனா வைரஸ் பரவும் சமயத்தில் மிகவும் உபயோகமாக இருந்தன.
இந்த பழக்கம் பிடித்திருப்பதால் மணிப்பூரிலும் கூட இதுபோன்ற கடைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.
இந்த கடைகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. இந்த முறையை நம் ஊர்களிலும் கடைபிடித்தால் எப்படி இருக்குமோ என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.