சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா ஆயிரங்கால் மண்டபத்தில் பூஜைகள் செய்ய தடை விதிப்பது
“இந்து சமய வழிபாட்டு விரோதம்” என்று இந்து தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நிறுவுனர் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்துக் குறிப்பிட்டவை…
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் உலகம் முழுக்க இருக்கக்கூடிய இந்து சைவ தமிழர்களின் நம்பிக்கை திருத்தலம். சிதம்பரம் கனகசபை உலகத்தோடு தொடர்புடையது என்று அறிவியல் ஆய்வாளர்களும் சொல்லுகிறார்கள்.
தில்லை மூவாயிரம் பேர் தீட்சிதர்களை கொண்டு பூஜைகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. வருடத்தில் ஆறுமுறை அபிஷேகம் பெருவிழாக்கள் நடக்கும். ஆனித் திருமஞ்சனம் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் இரண்டு முறை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த ஜூன் 19 தொடங்கி 29ஆம் தேதி வரை ஆனித் திருமஞ்சன உத்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை தொடர்ந்து 20ஆம் தேதி வெள்ளி சந்திரப்பிறை வாகனத்தில் சுவாமி உலா, 21 ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனம், 22ஆம் தேதி வெள்ளி பூத வாகனம்,
23ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 24ஆம் தேதி வெள்ளி யானை வாகனம், 26ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா, 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறுவது, பின்னர் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஞான ஆகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும் என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த நடைமுறை.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கும், வெளி நபர்களுக்கும், தரிசன அனுமதி வழங்காமல் அரசு விதிகளை பின்பற்றி கொடியேற்றத் துடன் ஆனித் திருமஞ்சன திருவிழா தொடங்கியது.
காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் போதிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோவில் பூஜைகளில் ஈடுபடக்கூடிய தீட்சிதர்கள் அனைவருக்கும் நோய் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிய அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று
பரிசோதனை செய்யப்பட்டது.
அனைத்து தீட்சிதர்களும் பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இரண்டு தீட்சிதர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தநிலையில் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய அன்றாட பூஜைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய மீதமுள்ள 148 தீட்சிதர்களை சிதம்பரம் கோவில் உள்ளே அனுமதிப்பதில், அன்றாடம் நடைபெற வேண்டிய உற்சவ கால பூஜை முறைகளுக்கு தடங்கல் உண்டாகும் வகையில் கடுமையான கெடுபிடிகளை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
சட்டத்தையும் அரசு விதிகளை மீறாமல் தேசப்பற்றுடன் தேசியக்கொடி ஏற்றி” தெய்வபக்தியும் தேசபக்தி”யையும் சமமாக ஏற்று இந்து சமய பக்தி நெறிகளை பின்பற்றக்கூடிய சிதம்பரம் தீட்சிதர்கள் மீது இவ்வளவு கடுமை காண்பிப்பது இந்து மத நம்பிக்கையாளர்களை மன வேதனை அடையச் செய்கிறது. இவ்வளவு கடுமையான போக்கு தவிர்க்கப் பட வேண்டியது என்று அரசாங்கத்திடம் தெரியப்படுத்துகிறோம்.
ஸ்ரீநடராஐர் திருக்கோவில் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற வேண்டிய ஆனித்திருமஞ்சன திருவிழா, ஆயிரம்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கு வழக்கம்போல் நடைபெற வேண்டும்.
டாஸ்மாக் மதுக் கடைகள் திறப்பு, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் மறைவின்போது சுடுகாட்டில் கூடிய கூட்டங்கள், சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் மரணம் குறித்து ஒட்டுமொத்தமாக காவல்துறை மக்கள் விரோதிகள் போல என்று சித்தரிக்க முயற்சித்து காவல்துறையின் மீதும் அரசாங்கத்தின் மீதும் கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என செயல்படும் மனக் கேடர்களின் எண்ணத்திற்கு அரசு வழிவகுத்து விடக்கூடாது.
எந்த சூழலிலும் சட்டத்தை மீறாத, நாட்டுக்கும் அரசுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து நடக்கக் கூடிய சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது இவ்வளவு கடுமை காட்டுவது இந்துசமய வழிபாட்டு உரிமைகள் தலையிடக் கூடிய செயலாக இந்து தமிழர் கட்சி பார்க்கிறது.
தெய்வ பக்தி விஷயத்தில் ஆன்மீக வழிபாட்டு நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்க கூடிய மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரடியாக தலையிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தக்க அறிவுரை வழங்கிடவும், வேண்டுமென இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்கோயில் வளாகத்திற்கு உள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு நடைபெறக் கூடிய பூஜை நடைமுறைகள் தடை இல்லாமல் நடைபெற மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா நோய்தொற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிப்புக்கு உள்ளாகாத தீக்ஷிதர்கள் தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்.
நாளை காலை சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் வளாகத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய ஆயிரங்கால் மண்டபத்தில் ஆனித் திருமஞ்சன உற்சவ திருவிழா நடைபெறுவதற்குஇருக்கக்
கூடிய தடைகள் எல்லாம் விலக வேண்டி உலகம் முழுக்க இருக்கக்கூடிய சிவனடியார்கள், சைவப் பெருமக்கள், இறை அன்பர்கள், இந்து மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்.
எல்லாம் வல்ல நடராஜ பெருமானின் பேரருளால் ஆயிரம்கால் மண்டபத்தில் காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை ஆனித்திருமஞ்சன பெருவிழா நடைபெறும், தேவையான மன மாற்றங்கள் உருவாகும் என்று நடராஜ பெருமானை பிரார்த்தனை செய்து கொள்கிறோம். .. என்று கூறியுள்ளார்.