மதுரை : மதுரையில் உள்ள தோப்பூர் உள்பட பல இடங்களில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு போதியளவு, குடிநீர் மற்றும் நேரத்துக்கு உணவும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து பலரும் சமூக வளைதலங்களில் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மதுரையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதா என்று அதிசயிக்கும் வண்ணம் வாகனப் போக்குவரத்து குறையவில்லை என்பதை பார்த்தாலே தெரிகிறது.
மதுரையில் ஊரடங்கை அமல்படுத்தினாலும், சாலைகளில் இரு சக்கரம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறைய வில்லை! மதுரை நகரை பொறுத்த மட்டில் பல இடங்களில் இருசக்கர வாகனம் அதிகம் தென்பட்டது. இது குறித்து விசாரித்ததில், பலர் காய்கறிகள் வாங்க செல்வதாக கூறி செல்கின்றனர். சென்னையைப் போல மதுரையில் கட்டுப்பாடுகள் இருந்தால்தான், கொரோனாவை கட்டுப் படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,71,492 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,61,118 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 6,96,583 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 15,99,65,345 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை