இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு குறித்து, மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் அறிஞர் டி.வி. வெங்கடேஸ்வரன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணையதளத்தில் ஜூலை 05 – நேற்று வெளியிடப்பட்டது. காண்க கட்டுரை: சுட்டி.. https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1636625
இந்தக் கட்டுரையில், பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசி கண்டுபிடிப்பும், இதை மனிதர்கள் மீது சோதனை நடத்தக் கிடைத்த அனுமதியும், கொரோனா முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என டி.வி.வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆறு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகின்றன. இரண்டு இந்தியத் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கிய தகவலாக, இந்தத் தடுப்பூசிகள் எதுவும் 2021க்கு முன்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை இணையதளத்தில் வெளியிட்ட மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், பின்னர் இந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் நீக்கியுள்ளது.
ஆகஸ்ட் 15-ல் தடுப்பூசி வரும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கருத்துக்கு எதிர்க் கருத்தாக 2021க்கு முன்பு மருந்து கிடைக்காது என விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்த தகவல் நீக்கப்பட்டது குறித்து பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர், இருந்தபோதிலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணையத்தில் இந்த கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பில், முழு பதிப்பும் உள்ளது. அதில் எந்த கருத்துகளும் இன்னும் நீக்கப் படவில்லை.
கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொடுத்த காலக்கெடுவுக்குள் பரிசோதனைகளை முடிப்பது சாத்தியமா என்று பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
”இவ்வளவு குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு சாத்தியமே இல்லை. தடுப்பு மருந்து உருவாக்கத்தை எவ்வளவு துரிதப்படுத்தினாலும் அதை செய்து முடிக்க குறைந்தது 12-18 மாதங்களாகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறைவான காலத்தில் தடுப்பு மருந்தை தயாரிப்பது சாத்தியமில்லாத ஒன்று என மருத்துவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
PIB uploads article claiming none of six Indian companies working on COVID-19 vaccine will have it ready before 2021, later removes mention of year