புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி இன்று 06-07-2020 பிற்பகல் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார். புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்தார். தமிழக அரசின் திரு.வி.க விருது கலைமாமணி விருது புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.
மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளிட்டார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.
தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். தமிழக அரசியல்வாதிகள் பலருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தார்.
இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.
புதுச்சேரியில் நாளை மாலை 4 மணியளில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். இந்தத் தகவலை மன்னன் மகன் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் கோ.பாரதி தெரிவித்துள்ளார்.