செங்கோட்டையில் தியாகியர் தினம் கடைப்பிடிக்கப் பட்டது. அதை ஒட்டி, சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள வீரவாஞ்சி சிலைக்கு, தமிழக அரசு சார்பில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் ரோசன்பேகம், மண்டல துணைதாசில்தார் தமிழ்செல்வி, துணை தாசில்தார் தெய்வசுந்தரி, வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் காளிச்செல்வி, நகராட்சி ஆணையாளர் (பொ)கண்ணன், சுகாதார அலுவலர் வெங்கடேசன் செங்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, அவைத் தலைவர் தங்கவேலு, பொருளாளர் வீ.ராஜா மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஞானராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசந்திரபிரபு, செங்கோட்டை வேளாண்மை துணை அலுவலர் ஷேக்முகம்மது உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது… தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரு மாவட்டங்களும் தியாகிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். தியாகிகள் தினமான இன்று செங்கோட்டையில் அமைந்துள்ள வீரவாஞ்சிநாதன் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இது மிகவும் வரவேற்க தக்கதாகும்.
கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் விதமாக சுற்றுலாதலங்கள், வழிபாட்டுதலங்கள், திரையரங்குகள், வணிகவளாகங்கள், உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நோயின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நோயின் தாக்கம் குறையும்பட்சத்தில் பொதுமக்கள் நன்மை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு அறிவிக்கும்
தமிழகத்தில் தற்போது வரும் செய்திகளில், துப்பாக்கியால் ஒரு எம்.எல்.ஏ., சுட்டுள்ள சம்பவத்தை வைத்தே எதிர்க் கட்சியினர் எப்பேர்ப்பட்டவர்கள் என தற்போது தமிழக மக்களுக்கு தெரியவந்துள்ளது.
ஈ-பாஸ் முறையில் எவ்வித முறைகேடுகளும் இல்லாத அளவுக்கு அரசு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அரசுடன் கலந்து ஆலோசித்து மேலும் எளிய முறையில் கிடைத்திட வழிவகை செய்யப்படும்… என்றார்.
இந்த விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன் தலைமையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.
நெல்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்களான துரை சூர்யபாண்டியன் மற்றும் எம்எஸ்பி திரு முருகன் இல்ல விழாவுக்கு வருகை வந்து சிறப்பித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. அவருடன் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் ஆகியோரும் வந்திருந்தனர். முன்னதாக, அவர்களுக்கு செங்கோட்டை வீரகேரளவர்மபுரம் ஸ்ரீ நவநீதகிருஷ்ணஸ்வாமி சந்நிதியில் வரவேற்பும் மரியாதைகளும் செய்யப் பட்டன.