கொரோனா தாக்கத்தால், உற்றார் உறவினர்களை ஆரத் தழுவி அணைக்க முடியாமல் அவதியுறும் இஸ்ரேலியர்கள், மரங்களை கட்டியணைத்து தனிமையை போக்கி வருகின்றனர்.
இஸ்ரேலில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முதியவர்களுடன் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் கடைபிடிக்கும் படி இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, சுற்றத்தாரால் தனித்து விடப்பட்டதாக உணர்பவர்கள், மரங்களிடம் அன்பை செலுத்துமாறு Apollonia தேசிய பூங்கா ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதன் விளைவால், அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர்.
உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படையான விஷயங்களில் ஒன்று கட்டிப்பிடி வைத்தியம்’. கட்டியணைத்தல் என்பது அதீத அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று. ஆனால், உணர்வு பூர்வமானது.
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நம்மை கட்டியணைத்து எதுவுமில்லை, எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதற்காக அன்பு நிறைந்த ஒருவர் நமது வாழ்க்கையில் இருந்தாலே மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்தான்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்வது ஆபத்தானது. இந்த நாள்களில் நண்பர்களையும் குடும்பத்தினரையும் கட்டியணைக்க முடியவில்லையா? அதற்கு பதிலாக ஒரு மரத்தை கட்டியணையுங்கள் என்று அறிவுறுத்துகிறது இஸ்ரேல்.
கொரோனா பரவுவதைத் தடுக்க தனிமனித இடைவெளி மிகவும் அவசியமான ஒன்றாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய விதிமுறைகள் நிலவும் நேரத்தில் தங்களது உணர்வுகளை கொஞ்சம் சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்கா ஆணையம் மரத்தை கட்டியணைக்கும் விஷயத்தை வலியுறுத்தி வருகிறது.
மக்கள் விரும்பாத இந்த கொரோனா காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இயற்கை அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லுங்கள். நன்றாக மூச்சு விடுங்கள். ஒரு மரத்தை கட்டியணையுங்கள். உங்களது அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பை நீங்களும் பெறுங்கள் என்று அபோல்லோனியா தேசிய பூங்காவின் இயக்குநர் ஓரிட் ஸ்டெயின்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்த பூங்காவில் மக்கள் மரங்களை கட்டியணைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.
இதனையடுத்து மரங்களை மக்கள் கட்டியணைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். இந்த விஷயம் மக்கள் பலரிடமும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு வரும் மக்கள் மரத்தை கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தியும் அன்பைப் பெற்றும் செல்கின்றனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் இயங்க இஸ்ரேல் மக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.