ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும், அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது என்றும் கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார் நேபாளப் பிரதமர் ஒலி. இது சீனாவின் பின்னணியில் இயங்கும் நேபாள பிரதமரின் குயுக்தி அரசியல் என்று கருத்துகள் பலமாக எதிரொலித்தன.
அண்மைக் காலமாகவே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, நேபாளம்! லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட, அந்நாட்டு நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதலும் அளித்தது.
இதனிடையே, தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் ஒலி குற்றம் சாட்டினார். ஆனால், தன் நாட்டின் வடக்குப் பகுதியை திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்து வரும் சீனாவின் போக்குக்கு வாய் திறக்கவே இல்லை. காரணம், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சீன கம்யூனிஸ்ட்டின் கிளை போல செயல்படுவதுதான்!
இந்நிலையில், நேபாள பிரதமர் புதிதாக ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார். தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல, நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான். நாங்கள் கலாச்சார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்து மீறப் பட்டுள்ளன என்றார்.
நேபாள பிரதமரின் அடிப்படையற்ற இந்தக் கருத்தை, வரலாற்று ஆதாரம் இல்லாத வெட்டிப் பேச்சு என்று இந்திய அரசு நிராகரித்தது. அதே நேரம், சர்மா ஒலி கூறிய கருத்துக்கு இந்து மதத் தலைவர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவசரமாக நேபாள அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
சர்மா ஒலியின் கருத்துகள் மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கத்துடன் கூறப்படவில்லை என்றும் அயோத்தியின் சிறப்பையும் பண்பாட்டு ரீதியாக அதற்கு உள்ள பெருமையையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனகபுரிக்கு இரு வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் பஸ் போக்குவரத்து திறந்து வைத்ததை சுட்டிக் காட்டி, இரு நாடுகளும் கலாசார ரீதியாக ஒன்றிணைந்தவை என்று கூறியது.