சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.400 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தென்சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. சென்னையில் 90 சதவீத மக்கள் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம்.
சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகளவு பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது என்றார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த 7 நாட்களில் சென்னை முழுவதும் கண்டறியப்படும் புதிய பாதிப்புகளின் விகிதம் 2.2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் புதிய பாதிப்பு 5.3 சதவீதமும், அம்பத்தூர் மண்டலத்தில் 3.6 சதவீதமும், மணலி மண்டலத்தில் 3.3 சதவீதம் அளவுக்கும் குறைந்துள்ளன.
ஆரம்பத்தில் அதிகளவிலான பாதிப்புகள் பதிவான கோடம்பாக்கம், ராயபுரம், அண்ணா நகர், திருவொற்றியூர், தேனாம்பேட்டை மண்டலங்களிலும் புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ளன.
அதே சமயம் தென்சென்னையை சேர்ந்த மண்டலங்களான அடையார், சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன. குறிப்பாக ஆலந்தூர் மண்டலத்தில் 4 சதவீதம் அளவுக்கு புதிய பாதிப்பு உயர்ந்துள்ளது.