ஆடி அமாவாசையை ஒட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று திருச்சி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 20, நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிக்கரைகளில் பக்தர்கள் கூடி, முன்னோர் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக ஆடி அமாவாசை என்றால், தமிழகத்தில் புனித நதிக்கரைகளில், புனித நீர் நிலைகளில் ஹிந்துக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து, திதி தர்ப்பணங்கள் கொடுப்பது வழக்கம். ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்கள், தட்சிணாயண, உத்தராயண புண்யகாலங்கள் தொடங்கும் மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள்.
இந்த தினங்களில் முன்னோர் வழிபாடு என்பது சிறப்பாக ஹிந்துக்களால் கடைப்பிடிக்கப் படுகிறது. அதிகாலை புனித நீர்நிலைகளில் நீராடி, அந்த நீர்நிலைகளின் நீரால் எள்ளும் தண்ணீருமாய் இறைத்து முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது என்பது நம்பிக்கை. இதற்காக, தென்மாவட்டங்களில் தாமிரபரணிக் கரையில் உள்ள பாபநாசம் தொடங்கி, மற்றுமுள்ள படித்துறைகளிலும், குற்றாலம் உள்ளிட்ட அருவிக் கரைகளிலும், குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலும் பெருமளவிலான அன்பர் கூட்டத்துடன் கடைப்பிடிக்கப் படுகிறது.
அது போல் பவானி,திருச்சி, திருவரங்கம், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிக் கரைகளிலும் ஹிந்துக்கள் பெருமளவில் கூடி திதி தர்ப்பணங்கள் கொடுப்பர். இது வருடந்தோறும் ஆடி, தை இரு மாதங்களிலும் வரும் அமாவாசை தினத்தில் கடைப்பிடிக்கப் படுவது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காலம் என்பதால் மக்கள் கூட்ட்டம் ஒன்றாகக் கூடுவது தடுக்கப் பட்டுள்ளது. 144 தடை உத்தரவு போட்டு, கூட்டம் கூடக் கூடாது என்று போலீஸார் வலியுறுத்தினர்.
அதை ஒட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது என்று, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.