திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடர்பான ஆலயங்களில் கொரோனா பாசிட்டிவ் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. புதிதாக திருச்சானூர் பத்மாவதி அம்மவாரு ஆலயத்தில் கொரோனா சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலயத்தில் பணிபுரியும் பொட்டு (மடப்பள்ளி) பணியாளருக்கு கொரோனா பாசிட்டிவாக முடிவு வெளியாகி உள்ளது. அதனால் உடனே ஆலய சுற்றுப்புற இடங்களுக்கு சானிடைஸ் செய்தார்கள் ஊழியர்கள். அதோடு பாசிட்டிவ் வந்த பணியாளரை தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பினார்கள்.
பொட்டு பணியாளர்களோடு இன்னும் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டு உள்ளார்கள் அதிகாரிகள். அதேபோல் கோவிலை தற்காலிகமாக மூடும் வாய்ப்பு உள்ளதாக செய்தி பரவியது.
அதுமட்டுமின்றி சீனிவாசமங்காபுரம் கோவிலில் இரண்டு பாசிட்டிவ் கேசுகள் பதிவாகின. அதனால் ஆலயத்தை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி வைத்தார்கள். மீதமுள்ள அர்ச்சகர்கள் மடப்பள்ளி சிப்பந்திகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
சென்ற மாதம் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஆலயத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் இரண்டு நாட்கள் ஆலயத்தை மூடி வைத்தார்கள்.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேவஸ்தான ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பை மனத்தில் கொண்டு தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று திருப்பதி திருமலை நிர்வகிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தத் கடிதத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். தரிசனம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் அது அத்தியாவசிய சேவை இல்லை என தெரிவித்துள்ளார்.
திருமலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேர் சுவாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. இதுவரை ஒரு பக்தர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தேவஸ்தானம் கூறுகிறது. ஆனால் தேவஸ்தான ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை மறந்துவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் தேவஸ்தான ஊழியர்களிடம் இருந்து கொரோனா தொற்று பக்தர்களுக்கு பரவும். மிகப் பெரிய இழப்பு ஏற்படுவதற்கு முன்பு உடனடி முடிவு எடுக்கப்பட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது, திருப்பதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.