திருவேடகத்தில் தர்ப்பணம் செய்ய ஆற்றுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீஸார்! கோயில் வாசலில் வழிபட்ட பக்தர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வைகை ஆற்றில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை தடுத்து திருப்பி போலீஸார் அனுப்பினர்.
திருவேடகத்தில் ஆண்டுதோறும், ஆடி அமாவாசையன்று பக்தர்கள் பிதுர்களுக்கு வைகையாற்றில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் பொதுமக்கள் வைகையாற்றில் தர்ப்பணம் கொடுக்க கூடத் தொடங்கினர்.
இதை முன்னமேயே எதிர்பார்த்த சோழவந்தான் காவல் நிலையத்தினர், தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை அழைத்து கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டுள்ளது, நீங்கள் கூட்டம் போடாமல் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுங்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும், போலீஸார், பொதுமக்கள் ஆற்றுக்குள்ளும், கோயிலுக்குள்ளும் செல்லதாவாறு தடுப்புகளை அமைத்து பலத்த பாதுகாப்பு போட்டியிருந்தனர். இதை அடுத்து, வந்த பக்தர்கள் சிலர் சாலையோரமாக தர்ப்பணம் செய்ய அங்கிருந்த புரோகிதர்களை கேட்க தொடங்கினர்.
இதையறிந்த போலீஸார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப் படுத்தினர். பக்தர்கள் பிறகு கோயில் வாசலிலே வழிபட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பே, பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்த்து முன் எச்சரிகையாக தடை உத்தரவு பதாகைகளை ஆற்றின் வாசலில் வைத்திருந்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை