மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்
மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (85) மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறால் கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், உ.பி., ஆளுநராக உள்ள ஆனந்திபென் பட்டேல், மத்திய பிரதேச ஆளுநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லால்ஜி டாண்டன், உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது மகன் அசுதோஷ், டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
1935ம் வருடம் ஏப்ரல் 12ம் தேதி பிறந்தவர் லால்ஜி. பாஜக.,வின் மூத்த தலைவராகத் திகழ்ந்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் நெருக்கம் கொண்டிருந்தவர். மனைவி கிருஷ்ணா டாண்டன், 1958இல் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஆசுதோஷ் டாண்டன், பில்லு டாண்டன் என இரு வாரிசுகள்.
மறைந்த மூத்த தலைவர் லால்ஜி டாண்டனுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில், ‛உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிததவர் லால்ஜி. ஒரு திறமையான நிர்வாகியாக ஓர் அடையாளத்தை உருவாக்கினார். எப்போதும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அரசியலமைப்பு விவரங்களை நன்கு அறிந்தவர்; வாஜ்பாயுடன் நீண்ட நெடிய நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். துயரகரமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்துக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி’ என்று பதிவிட்டுள்ளார்.