வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சஷ்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுளிலும் கந்தசஷ்டி கவச புத்தகங்களை வழங்கி அதன் சிறப்புகளை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் தெரிவித்துள்ளார்.
‘கருப்பர் கூட்டம் ‘ என்ற யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்திரித்து பதிவு செய்து வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அந்த விவகாரம் தமிழகத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் கடவுளை பற்றி ஆபாசமாக சித்திரித்தவர்களை கண்டித்தும் இனி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் மற்றும் பா.ஜ.க. மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய காமாட்சிபுரி ஆதினம், “உலகம் முழுவதும் முருக பக்தர்கள் வாழ்வாங்கு வாழ முருகனின் கை வேலை வணங்கி வருகின்றனர். அதனை கேலி செய்யும் வகையில், ஆபாசமாக சித்தரித்தது கடுமையாக கன்டிக்கதக்கது !
மற்ற மதங்களை யாரேனும் இழிவுபடுத்தும் பொழுது அந்த மதத்தினர் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்து மதம் இழிவு செய்யப்படும் பொழுது பலர் ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
இந்துக்களுக்கு ஓர் அநீதி என்றால் அனைவரும் முன்னால் நிற்க வேண்டும் அதுவே இந்து தர்மம்! பலரும் தற்பொழுது முகக் கவசம் அணிகிறார்களோ இல்லையோ தங்கள் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் தினமும் கேட்கிறார்கள்! கந்த சஷ்டி கவசத்தையும், முகக் கவசத்தையும் ஆகஸ்ட் 9ஆம் தேதி சஷ்டி நாளான அன்று அனைத்து முருக பக்தர்களின் வீடுகளுக்கும் வழங்க இருக்கிறோம் என்றார் காமாட்சிபுரி ஆதின சுவாமிகள்!
- செய்தி: ஏ.கே. நாயுடு