தென்காசி அருகே கொரோனா தொற்று கண்டறியப் பட்டு சிகிச்சியில் இருந்த நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
தென்காசி மாவட்டத்தில் கொரோனா சோதனை 33 ஆயிரம் பேர்களுக்கு நடத்தப்பட்டுள்ளன. இதில் 1403 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 68 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 67 பேர் தென்காசி மாவட்டத்தில் வசித்து வருபவர்கள். ஒருவர் மட்டும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்.
இவர்களில் 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மீதமுள்ள 687 பேர் மட்டும் தென்காசி மாவட்ட மருத்துவமனை, ஆய்க்குடி தனியார் கல்லூரி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, வாசுதேவ நல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சங்கரன்கோவில் குருவிகுளம் அருகிலுள்ள ஆவுடையாள்புரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவர் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று இரவு 10.30 மணி வரை அலைபேசியில் குடும்பத்தாருடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
திடீரென்று இன்று அதிகாலை 3 மணி அளவில் நோய் தடுப்பு சிகிச்சை முகாமில் வாயில் கதவில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இதுவே முதல் முறை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டும் இறப்பு விகிதம் மிகக் குறைவான அதே நேரம் நோய் குணமாகி வீடுகளுக்குத் திரும்புபவர்கள் இந்தியாவில் தான் அதிகம். குறிப்பாக, நாட்டிலேயே இரண்டாவது மிக மோசமான பாதிப்புள்ள மாநிலமாக தமிழகம் இருந்தாலும், இங்குதான் இறப்பு விகிதம் மிக மிகக் குறைவு.
இதற்கு மரபு ரீதியான சில காரணங்களை வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களில், மருந்தே உணவு, உணவே மருந்து என்ற சித்த மருத்துவ அறிவுரை கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
நாம் உணவில் சேர்க்கும் இஞ்சி, மஞ்சள், சீரகம், மிளகு போன்ற அனைத்துமே கொரோனா போன்ற வைரஸ்கிருமிகளின் கொடுமையான தாக்குதல்களில் இருந்து எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இது போல், கொரோனா வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது போன்ற மனநிலையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.