மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிக்கப் பட்டது. ஜெ., வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ., இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருமான வரித்துறை சார்பில் ஜெ., செலுத்த வேண்டிய வரி பாக்கி 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப் படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரூ. 68 கோடியை தமிழக அரசு செலுத்தியது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது.”இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை. நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜெ. வீடு நினைவில்லமாக அறிவிக்கப்பட்டதை அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன். மீண்டும் சட்டப் போராட்டம் தொடரும். அரசு உடைமையாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா? அல்லது வழக்கு தொடர்ந்தோமா? ஜெயலலிதா மரணம் எதிர்பாராதது. இல்லாவிடில் அவர் உயில் எழுதியிருப்பார்.
ஜெயலலிதா வீட்டை கோயிலாக நினைக்கலாம் ஆனால், கோயிலாக மாற்ற முடியாது. இது முடிவல்ல ஆரம்பம்தான். வேதா நிலையத்தை விட்டுத்தர வேண்டும் என நினைத்தது இல்லை என்றார் தீபா.
- சதானந்தன், சென்னை