தென் இந்தியாவில் பெரும் அளவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா சதித் திட்டம் தீட்டியிருக்கிறது என்றும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும் ஐநா. அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக, ஐநா எச்சரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனி நபர்கள், அமைப்புகளை கண்காணிக்கும் ஐநா.வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குழுவின் 26வது அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வருமாறு:
1. இந்திய துணைக்கண்டத்தில் அல்-கொய்தா (ஏக்யூஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் உள்ள நிம்ருஸ், ஹெல்மண்ட், கந்தகார் ஆகிய மாகாணங்களில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.
2. அல்-கொய்தா அமைப்பில் இந்தியா, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தானை சேர்ந்த 150 முதல் 200 பயங்கரவாதிகள் உள்ளனர்.
3. ஏக்யூஐஎஸ்சின் தற்போதைய தலைவராக ஒசாமா மகமூத் உள்ளார். அசிம் உமர் இறந்ததைத் தொடர்ந்து அவர் பதவியேற்றுள்ளார்.
4. தனது முன்னாள் தலைவரின் மரணத்திற்கு பழிதீர்க்க இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் பதில் தாக்குதல் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
5. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியக் கிளை (ஹிந்த் விலாயா) கடந்த ஆண்டு மே 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில். தனக்கு இந்தியாவில் 180 முதல் 200 பயங்கரவாதிகள் இருப்பதாகக் கூறியிருக்கிறது.
6. இந்த அமைப்பு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பயங்கரவாதிகளைக் கொண்டுள்ளது.
7. கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, ஐஎஸ் பயங்கரவாதிகள் (ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎல், தாயிஷ் என பல பெயரில் அழைக்கப்படுகின்றனர்) ‘இந்தியாவில் புதிய நிர்வாகப் பகுதியை உருவாக்கி இருக்கிறோம்’ என அறிவித்துள்ளனர்.
ஆப்கானில் வலம் வரும் 6000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாதக் குழு பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்புதான் என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 6000-6500 பேரில் பெரும்பாலானோர் தெஹ்ரிக் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
ஆப்கனின் 12 மாகாணங்களில் அல்-கொய்தா இப்போதும் முனைப்புடன் செயல்படுகிறது. அதன் தலைவராக அய்மன் அல் ஜவாஹிரி உள்ளார். அல்கொய்தா பயங்கரவாதிகள் 400 முதல் 600 பேர் வரை ஆப்கனில் உள்ளனர்.