நண்பர்களே, இப்படி ஏகப்பட்ட இளைய நண்பர்கள் இருக்கிறார்கள், கடினமான சூழ்நிலைகளிலும்கூட, அவர்களின் தன்னம்பிக்கை, அவர்களுடைய வெற்றிக்கதைகள், இவையெல்லாம் நமக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன.
இயன்ற அளவு இளைய நண்பர்களோடு உரையாட வேண்டும் என்ற ஆவல் என்னை உந்தியது; ஆனால் காலம் குறைவாக இருப்பதால் இயலவில்லை. நீங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை, உங்கள் எழுத்துக்களிலேயே வடித்து, நாட்டுக்கு ஊக்கமளியுங்கள், உங்களைப் பற்றிய உங்கள் கதையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று என் இளைய நேசங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஏழு கடல்கள் தாண்டி, பாரத நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலே இருக்கும் சிறிய நாட்டின் பெயர் சூரினாம். இந்தியாவுக்கும் சூரினாமுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 100 ஆண்டுகளை விடவும் வெகு முன்பாக, நம் நாட்டவர் அங்கே சென்றார்கள், அதைத் தங்கள் நாடாக ஆக்கிக் கொண்டார்கள்.
இன்று 4ஆவது 5ஆவது தலைமுறையாக அங்கே வசிக்கிறார்கள். இன்றைய நிலையில் சூரினாமில் நான்கில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அங்கே இருக்கும் பேசப்படும் மொழிகளில் ஒன்றின் பெயர் சர்நாமீ என்பதை நீங்கள் அறிவீர்களா? இது போஜ்புரியின் ஒரு வழக்குமொழி. இந்தக் கலாச்சாரத் தொடர்புகள் இந்தியர்களான நமக்கு பெரும் பெருமிதத்தைக் கொடுக்கிறது.
உள்ளபடியே, ஸ்ரீ சந்திரிகா ப்ரஸாத் சந்தோகீ என்பவர் சூரிநாம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் இந்தியாவின் நண்பர் என்பதோடு, 2018ஆம் ஆண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கான நாடாளுமன்ற மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டுமிருக்கிறார்.
ஸ்ரீ சந்திரிகா பிரஸாத் சந்தோகீ அவர்கள் வேத மந்திரங்கள் முழங்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டார், சம்ஸ்க்ருதத்தில் பேசினார். அவர் வேதங்களை மேற்கோள் காட்டி, ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்பதோடு கூடவே, தனது சபத்மேற்பை நிறைவு செய்தார். தனது கரங்களில் வேதத்தை வைத்துக் கொண்டு அவர், நான், சந்திரிகா பிரஸாத் சந்தோகீ என்று தொடங்கி மேலே என்ன சொன்னார் தெரியுமா? அவர் ஒரு வேத மந்திரத்தை உச்சரித்தார்.
ஓம் அக்நே வ்ரதபதே வ்ரதம் சரிஷ்யாமி தச்சகேயம் தன்மேராத்யதாம். இதமஹம்ந்ருதாத் சத்யமுபைமி.
अग्ने-व्रतपते व्रतं चरिष्यामि, तच्छकेयं तन्मे राध्यताम।इदं अहं अनृतात् सत्यम् उपैमि।।
அதாவது, அக்நி தேவனே, சங்கல்பத்தின் தேவனே, நான் ஒரு உறுதி மேற்கொள்கிறேன். இதை செயல்படுத்த எனக்குத் தேவையான சக்தியையும், திறமையையும் அளியுங்கள். பொய்மையிலிருந்து நான் விலகி இருக்கவும், வாய்மையை நோக்கி என் பயணம் தொடரவும் எனக்கு ஆசிகளை நல்குங்கள் என்பதே இதன் பொருள். உண்மையிலேயே இது நம்மனைவருக்கும் கௌரவத்தை அளிக்கவல்ல ஒரு விஷயம்.
நான் ஸ்ரீ சந்திரிகா ப்ரஸாத் சந்தோகீ அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய நாட்டுப்பணி மிகச் சிறப்பாக நடந்தேற 130 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்ற முறையில் பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….