நண்பர்களே, கார்கில் போரின் போது அடல் அவர்கள் செங்கோட்டையிலிருந்து கூறியவை இன்றும்கூட அனைவராலும் பேசப்படும் கருத்தாக இருந்து வருகிறது. காந்தியடிகளின் ஒரு மந்திர வாக்கியத்தை அடல் அவர்கள் அப்போது நினைவு கூர்ந்தார். வாருங்கள், அடல் அவர்களின் உணர்வுகளை அவர் குரலிலேயே நாம் கேட்போம், புரிந்து கொள்வோம், காலத்தின் கட்டாயம் என்று அறிந்து அதனை ஏற்போம்.
அதாவது, உங்களுக்கு எப்போதாவது ஒரு சங்கடம் ஏற்பட்டால், அப்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற நிலை ஏற்பட்டால், மிகவும் ஏழ்மையில், நலிவான நிலையில் இருக்கும் இந்தியரைப் பற்றி சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். தாங்கள் செய்ய இருப்பனவற்றால் அந்த மனிதனுக்கு நலன் விளையுமா விளையாதா என்பது தான் அது.
காந்தியடிகளின் இந்தக் கருத்தியலை முன்னெடுத்துச் சென்ற அடல் அவர்கள், கார்கில் போரின் போது நமக்கெல்லாம் மற்றுமொரு மந்திரத்தை அளித்தார். எந்த ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவையும் எடுக்கும் முன்பாக, நமது முயல்வுகள், அடைய மிகவும் கடினமான சிகரங்களில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்துவரும் இராணுவத்தினருக்கு கண்ணியம் சேர்ப்பதாக இருக்குமா இருக்காதா என்பது தான் அந்த மந்திரம்.
நண்பர்களே, போர்ச்சூழலில் நாம் செய்யும் செயல்களோ, பேசும் சொற்களோ, எல்லைப்புறங்களில் நெஞ்சுரத்தோடு இருக்கும் வீரர்களின் மனோபலத்தின் மீதும், அவர்களின் குடும்பத்தாரின் மனோபலத்தின் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த விஷயத்தை நாம் என்றும் மறந்து விடக் கூடாது; ஆகையால் நமது நடவடிக்கைகள், நமது செய்கைகள், நமது சொற்கள், நமது அறிக்கைகள், நமது வரையறைகள், நமது இலட்சியம், அனைத்தையும் நாம் உரைகல்லில் உரைத்துப் பார்த்தே புரிய வேண்டும்; இதனால் வீரர்களின் மனோபலமும், மரியாதையும் உயர வேண்டும். பெற்ற பொன்னாடு அனைத்தை விடவும் நனிசிறந்தது என்ற மந்திரச் சொற்களுக்காக, ஒற்றுமை என்ற இழையில் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டுமக்கள், நமது இராணுவத்தினரின் வல்லமையை பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கிறார்கள். ‘சங்கே சக்தி கலௌ யுகே’, அதாவது கலியுகத்தில் ஒற்றுமையே சக்தி என்று நாம் கூறுவதுண்டு.
சில வேளைகளில் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நாட்டுக்குக் கேடுதரும் விஷங்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். சில வேளைகளில் ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக சிலர் அவற்றை பகிரவும் செய்கிறார்கள். இது தவறு என்று அறிந்தும் இதைச் செய்து வருகிறார்கள்.
இன்று, போர் என்பது எல்லைப்புறங்களில் மட்டுமல்ல, நாட்டின் பல முனைகளில் போரிடப்பட்டு வருகிறது, இதில் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். தேசத்தின் எல்லைப்புறத்தில், கடினமான சூழ்நிலைகளில் போரிட்டுவரும் நமது வீரர்களை நினைவில் கொண்டு நாம் நமது போக்கைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….