நண்பர்களே, கொரோனா காலத்தில் நமது கிராமப்புறங்கள் தான் நாடு முழுவதற்கும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது. கிராமவாசிகள், கிராமப் பஞ்சாயத்துக்கள் ஆகியோரிடமிருந்து பல நல்ல முயற்சிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. ஜம்முவில் இருக்கும் த்ரேவா கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் பல்பீர் கௌர்.
தனது பஞ்சாயத்தில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு quarantine centre, அதாவது தனியிருப்பு மையத்தை ஏற்படுத்தினார் பல்பீர் கௌர் அவர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்துக்கு வருவோருக்கு என வரும் வழியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தங்கள் கைகளைக் கழுவுவதில் யாருக்கும் எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்ல, தனது தோள்களிலே spray pump, அதாவது தெளிப்பானைத் தொங்க விட்டுக் கொண்டு, தன்னார்வலர்களோடு இணைந்து, பஞ்சாயத்து முழுவதிலும் சரி, அக்கம்பக்கத்துப் பகுதிகளிலும் நோய்நீக்கும் பணியை பல்பீர் கௌர் மேற்கொண்டு வருகிறார். இவரைப் போலவே கஷ்மீரைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் பஞ்சாயத்துத் தலைவர் இருக்கிறார்.
காந்தர்பல்லின் சௌண்ட்லீவாரைச் சேர்ந்த ஜைதூனா பேகம் தான் அவர். கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில், வருமானத்துக்கும் வழிவகை செய்வது என ஜைதூனா பேகம் அவர்கள் தீர்மானித்தார். அவர் பகுதி முழுவதிலும் இலவச முகக்கவசம், இலவச ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை விநியோகம் செய்ததோடு, மக்களுக்கு நடவுக்கான விதைகளையும், ஆப்பிள் செடிகளையும் அளித்தார்; இதன் வாயிலாக மக்கள் விவசாயத்தில், தோட்டங்களில் தங்கள் தொழிலைத் தொடர முடியும்.
நண்பர்களே, கஷ்மீரத்திலே மேலும் ஒரு ஊக்கமளிக்கக்கூடிய நிகழ்வு. இங்கே அனந்தநாகின் ஊராட்சித் தலைவர் மொஹம்மத் இக்பால் அவர்களுக்கு தனது பகுதியில் நோய்நீக்கம் செய்ய தெளிப்பான் தேவைப்பட்டது. அவர் தகவல்களைத் திரட்டிய போது, இயந்திரத்தை வேறு ஒரு நகரத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது, மேலும் இதன் விலை ஆறு இலட்சம் ரூபாய் என்பது தெரிய வந்தது.
இப்போது இக்பால் அவர்கள் தானே முயன்று ஒரு தெளிப்பானை வடிவமைத்தார், அதுவும் வெறும் 50,000 ரூபாய் செலவில். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும், அனைத்து இடங்களிலும், இப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கவல்ல சம்பவங்கள் தினம்தினம் வந்தவண்ணம் இருக்கின்றன, இவர்களனைவரும் நம் வாழ்த்துக்களுக்கு உரியவர்கள். சவால் என்ற ஒன்று வந்த போது, அதை அதே அளவு வலிமையோடு எதிர்கொள்ளவும் செய்திருக்கிறார்கள் மக்கள்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….