என் மனம்நிறை நாட்டுமக்களே, சரியான அணுகுமுறை மூலமாக ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக, எப்போதும், சங்கடங்களை சந்தர்ப்பங்களாகவும், வினைகளை வளர்ச்சியாகவும் மாற்றுவதில் பேருதவி கிடைக்கிறது.
இப்போது கொரோனா காலகட்டத்திலும் நமது நாட்டின் இளைஞர்களும் பெண்களும், தங்களுடைய திறன்கள்-திறமைகளை ஆதாரமாகக் கொண்டு புதிய வழிமுறைகளை எப்படித் துவக்கினார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஹாரில் பல பெண்கள் சுயவுதவிக் குழுக்கள், மதுபனி ஓவியம் வரையப்பட்ட முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள், சில நாட்களிலேயே இது மிகவும் பிரபலமாகிப் போனது. இந்த மதுபனி முகக்கவசம் ஒருபுறம் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அதே வேளையில், மக்களுக்கு ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் அளித்து வருகிறது.
உங்களுக்கே தெரியும், வடகிழக்கில் மூங்கில் எப்படி ஏராளமாக விளைகிறது என்ற விஷயம். இப்போது இந்த மூங்கிலைக் கொண்டு திரிபுரா, மணிப்பூர், அஸாமைச் சேர்ந்த கைவினைஞர்கள் உயர்தரமான நீர்பாட்டில்கள், டிஃபன் பாக்ஸ்கள் ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். மூங்கிலில் செய்யப்பட்ட இவற்றின் தரத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அசந்தே போவீர்கள், மூங்கில் பாட்டில் இத்தனை நேர்த்தியா என்று ஆச்சரியப்படுவீர்கள், முக்கியமாக இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. இவற்றைத் தயாரிக்கும் போது, மூங்கில் முதலில் வேம்பு மற்றும் பிற மூலிகைச் செடிகளோடு சேர்த்துக் கொதிக்கவிடப்படுகிறது.
இதன் காரணமாக இதில் மூலிகைத் தன்மையும் ஏற்படுத்தப்படுகிறது. சிறியசிறிய உள்ளூர்ப் பொருட்களிலிருந்து எப்படி பெரும் வெற்றி கிடைக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும் கிடைக்கிறது. ஜார்க்கண்டின் பிஷுன்புரில் இப்போதெல்லாம் முப்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் lemon grass என்ற எலுமிச்சைப் புல்லினை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எலுமிச்சைப்புல் நான்கே மாதங்களில் விளைந்து பயிராகிறது, இதன் எண்ணெய், சந்தைகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இப்போதெல்லாம் இதற்கு அதிகத் தேவை உருவாகியிருக்கிறது. நான் நாட்டின் வேறு இரு பகுதிகளைப் பற்றியும் கூற விரும்புகிறேன். இவை இரண்டுமே ஒன்றிலிருந்து மற்றது பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பன, இந்தியாவை தற்சார்பு உடையதாக ஆக்க, தத்தம் பாணியில் சற்று வித்தியாசமான முயல்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒன்று லத்தாக், மற்றது கட்ச். லே-லத்தாக் என்ற பெயர்களைக் கேட்டவுடனேயே அழகு கொஞ்சும் பள்ளத்தாக்குகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் கருத்தை அள்ளும், தூய்மையான தென்றல் காற்று நம்மை ஸ்பர்ஸிக்கும் உணர்வு உண்டாகும். அதே வேளையில் கட்ச் பகுதி என்றவுடன் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பாலைவனம், பசுமையேதும் இல்லாத வறண்ட நிலம் ஆகிய காட்சிகளே நம் மனதில் வந்து அலைமோதும். லத்தாக்கிலே ஒரு சிறப்பான பழம் உண்டு, இதன் பெயர் ஆப்ரிகாட் அதாவது பாதாமி.
இந்தப் பொருள் ஒரு பகுதியின் பொருளாதார நிலையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்றாலும், விநியோகச் சங்கிலி, தீவிரமான பருவநிலை போன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குறைவான பாதிப்பு ஏற்படும் வகையில் இன்று ஒரு புதுமை புகுத்தப்பட்டு வருகிறது.
இது ஒரு dual system-இருவகை முறை, இதன் பெயர் solar apricot dryer and space heater, அதாவது சூரிய சக்தியால் இயங்கும் பாதாமி உலர்த்தி மற்றும் சூழல் வெப்பமுண்டாக்கி. இந்தக் கருவி பாதாமியையும் இன்னும் பிற பழங்களையும் காய்கறிகளையும், தேவைக்கேற்ப சுகாதாரமான முறையில் உலர்த்துகிறது. முன்பெல்லாம், பாதாமி நிலங்களுக்கு அருகிலே உலர்த்தும் போது, பாதிப்பு ஏற்பட்டு வந்ததோடு கூடவே, தூசியும், மழைநீரும் காரணமாக பழங்களின் தரம் பாதிக்கப்பட்டு வந்தது.
இன்னொரு புறமோ, இப்போது கட்சில் விவசாயிகள் dragon fruits என்ற ட்ராகன் பழங்களைப் பயிர் செய்வதில் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கட்சிலே ட்ராகன் பழங்களா என்று கேட்பவர்கள் ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள்.
ஆனால் அங்கே, இன்று பல விவசாயிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். பழத்தின் தரம், குறைவான நிலத்தில் அதிக விளைச்சல் என்ற திசையில் கணிசமான புதுமை புரியப்பட்டு வருகிறது. இந்தப் பழங்கள் மீது மக்களிடம் இருக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக காலை உணவின் போது இது எடுத்துக் கொள்வது அதிகரித்திருக்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ட்ராகன் பழங்களை நாம் இறக்குமதி செய்யத் தேவையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே கட்ச் விவசாயிகளின் மனவுறுதியாக இருக்கிறது, இது தானே சுயசார்பு பாரதம்!!
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….