நண்பர்களே, குறிப்பாக எனது இளைய நேசங்களே, நமது நாடு மாற்றம் கண்டு வருகிறது. எப்படி மாறி வருகிறது? எத்தனை வேகமாக மாறி வருகிறது? எந்தெந்தத் துறைகளில் மாறி வருகிறது? ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு நாம் நமது கவனத்தைச் செலுத்தினால், நமக்குத் திகைப்பு மேலிடும்.
ஒரு காலத்தில், விளையாட்டு தொடங்கி, பிற துறைகளிலும் பெரும்பாலானோர், ஒன்று பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் அல்லது பெரும் குடும்பங்கள் அல்லது புகழ்பெற்ற பள்ளிகள்-கல்லூரிகளில் படிப்பவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இப்போதோ நாடு மாறி வருகிறது. கிராமங்களிலிருந்து, சிறிய நகரங்களிலிருந்து, எளிய குடும்பங்களிலிருந்து நமது இளைஞர்கள் வெளிப்படுகிறார்கள். வெற்றியின் உச்சங்களைத் தொடுகிறார்கள். இவர்கள் சங்கடங்களுக்கு இடையேயும் கூட, புதியபுதிய கனவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சிலரது பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்று மனதின் குரலில் அப்படிப்பட்ட சில திறமைசாலிக் குழந்தைகளிடம் நாம் பேச இருக்கிறோம். இப்படி ஒரு புத்திகூர்மை மிக்கவர் தான் க்ருத்திகா நாந்தல். க்ருத்திகா ஹரியாணாவின் பானீபத்தைச் சேர்ந்தவர்.
மோதி ஜி – ஹெலோ, க்ருத்திகா அவர்களே, வணக்கம்.
க்ருத்திகா – வணக்கம் சார்.
மோதிஜி – தேர்விலே சிறப்பான மதிப்பெண்கள் பெற்றமைக்கு பலப்பல வாழ்த்துக்கள்.
க்ருத்திகா – நன்றி சார்.
மோதி ஜி – இப்போதெல்லாம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லியே நீங்கள் களைத்துப் போயிருப்பீர்கள், இல்லையா. ஏகப்பட்ட பேர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருப்பார்களே!!
க்ருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களை அவர்களுக்குத் தெரியும் என்பதால், உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுபவர்களும் பெருமையாக உணர்வார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
க்ருத்திகா – சார், மிகவும் நன்றாக இருக்கிறது. பெற்றோருக்கும் பெருமையாக இருக்கிறது.
மோதி ஜி – சரி, உங்களுக்கு அதிக கருத்தூக்கம் அளித்த விஷயம் என்ன, சொல்லுங்கள்.
க்ருத்திகா – சார், என்னுடைய பெரிய உத்வேகம் என்றால் அது என் தாயார் தான்.
மோதி ஜி – பலே, சரி நீங்கள் உங்கள் தாயாரிடம் எதைக் கற்றுக் கொண்டீர்கள்?
க்ருத்திகா – சார், அவர் தனது வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களைச் சந்தித்தவர்; இருந்தாலும் கூட, தைரியமும், பலமும் வாய்ந்தவர். அவரைப் பார்த்துப்பார்த்துத் தான் எனக்கு இந்த அளவுக்கு உத்வேகம் கிடைத்தது, நானும் அவரைப் போல ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.
மோதி ஜி – உங்கள் தாயார் எதுவரை படித்திருக்கிறார்?
க்ருத்திகா – சார், இளங்கலைப் படிப்பு படித்திருக்கிறார் அவர்.
மோதி ஜி – ஓ, இளங்கலை வரை படித்திருக்கிறாரா?
க்ருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி, அப்படியென்றால் உங்கள் தாயார் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாரா?
க்ருத்திகா – ஆமாம் சார். கற்றுக் கொடுப்பார், மேலும் உலகின் யதார்த்தங்கள் பற்றியும் நிறைய கூறுவார்.
மோதி ஜி – உங்களை அவர் அதட்டுவார் தானே??
க்ருத்திகா – ஆஹா, அதட்டவும் செய்வார் சார்.
மோதி ஜி – சரிம்மா, நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?
க்ருத்திகா – சார், நான் டாக்டர் ஆக விரும்புகிறேன்.
மோதி ஜி – அட பரவாயில்லையே!!
க்ருத்திகா – MBBS
மோதி ஜி – ஆனால் டாக்டராவது ஒன்றும் எளிதான விஷயம் இல்லையே!!
க்ருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – பட்டம் வேண்டுமானால் கிடைக்கலாம், ஏனென்றால் நீங்கள் மிகவும் புத்திக்கூர்மையுடைய குழந்தை; ஆனால் டாக்டர்களுடைய வாழ்க்கை, சமூகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
க்ருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இரவிலும் கூட அவர்களால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது. ஒரு நோயாளியுடைய அழைப்பு வரும், மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும், உடனடியாக விரைய வேண்டியிருக்கும், அதாவது ஒருவகையில் தினமும் 24 மணி நேரம், ஆண்டு முழுக்க 365 நாட்கள் இப்படித் தான். மருத்துவர்களின் வாழ்க்கை, மக்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறது.
க்ருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – மேலும் அபாயமும் இருக்கிறது; இன்றைய நிலையில் பலவகையான நோய்கள் இருக்கின்றன எனும் போது மருத்துவர்களும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
க்ருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி க்ருத்திகா, ஹரியாணா மாநிலம் விளையாட்டுத் துறையில் இந்தியா முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது, ஊக்கமளிப்பதில் முன்னணி இடத்தை வகிப்பது.
க்ருத்திகா- ஆமாம் சார்.
மோதி ஜி – அப்படியென்றால் நீங்களும் ஏதாவது விளையாட்டுக்களில் ஈடுபடுவதுண்டா, ஆர்வம் இருக்கிறதா?
க்ருத்திகா – சார், நான் பள்ளியில் கூடைப்பந்து விளையாடுவதுண்டு.
மோதி ஜி – அப்படி என்றால் அதிக உயரமானவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் உயரம் எத்தனை?
க்ருத்திகா – இல்லை சார், என் உயரம் 5 அடி 2 அங்குலம் தான்.
மோதி ஜி – சரி இந்த விளையாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது?
க்ருத்திகா – சார், அதன் மீது எனக்கு ஆழமான ஆர்வம் உண்டு.
மோதி ஜி – பலே, சரி க்ருத்திகா அவர்களே, உங்கள் தாயாருக்கு என் தரப்பிலிருந்து வணக்கங்களைத் தெரிவியுங்கள், அவர் தான் உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர். உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். உங்கள் தாயாருக்கு வணக்கம், உங்களுக்கு பலப்பல பாராட்டுக்கள், பலப்பல நல்வாழ்த்துக்கள்.
க்ருத்திகா – நன்றி சார்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….