அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவே உழைத்து இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டிய கலாமின் மறைவு நாட்டையே உலுக்கிய சம்பவமாகிப் போனது. இன்று கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மறைந்த 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளனர்.மக்கள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார்.
அப்துல் கலாம் இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்று கூறி ஊக்க சக்தியாக இருந்தவர்.கலாம் மறைந்து 5வது ஆண்டுகள் ஆகிறது.துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று எனது தாழ்மையான அஞ்சலி. அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி, சிறந்த மனிதர் மற்றும் அவர் ஒரு ‘மக்கள் குடியரசுத் தலைவர்’ ஆவார். அவர் நாட்டின் மக்களை, குறிப்பாக இளைஞர்களை தனது செயல்கள் மற்றும் சொற்களின் மூலம் ஊக்கப்படுத்தினார்.” என்று குறிப்பிட்டு கலாமுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்துல் கலாமுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவு, ஞானம் மற்றும் எளிமை ஆகியவற்றின் வடிவமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி. அவர் ஒரு மக்கள் குடியரசுத் தலைவர். அவர் விஞ்ஞானம் முதல் அரசியல் வரை பல துறைகளில் அழியாத தடங்களை விட்டுச்சென்றுள்ளார். அறிவிற்கான அவரது இடைவிடாத தேடலானது தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
சுதர்சன் பட்நாய்க் – மணல் சிற்பக் கலைஞர் புரி கடற்கரையில், அப்துல்கலாம் முகத்தை மணலில் சிற்பமாக வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்துல் கலாம் அமரரான ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்! சிங்கப்பூர் அப்துல் கலாம் விஷன் அமைப்பு இந்நாளை அமைதியோடும், ஆழமாகவும் கொண்டாடியது.
வயதானோர், வசதி இல்லாதோர், கவனிப்பாரற்ற நோயாளிகள் என மக்களை எடுத்துப் பேணும் ஸ்ரீ நாராயணா மிஷனில் கலாம் அமைப்பினர் நேரில் சென்றனர். அவர்களின் இன்றைய மதிய உணவிற்கான செலவினை ($600/-) இல்லத்தின் தலைமை நிர்வாகி திரு.தேவேந்த்ரன் அவர்களிடம் சேர்த்தனர். . மகிழ்ச்சி பொங்க திரும்பினர்.