பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதி ஆகியிருந்தால் நாட்டிற்கும் இளைஞர்களுக்கும் மிகவும் நன்மை கிடைத்திருக்கும் என்று தெலங்காணா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து வெளியிட்டார்.
கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை தலைமையில் நடந்த பிரத்தியேக நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி ஊடகம் மூலமாக ஆளுநர் பங்கு பெற்றார். அப்போது ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், சகிப்புத்தன்மை மிகுந்த அழகான சமுதாயத்தை உருவாக்குவதே கலாமுக்கு நாம் அளிக்கும் உண்மையான அஞ்சலி என்று குறிப்பிட்டார்.
உழைப்பையும் முயற்சியையும் அப்துல்கலாம் மிகவும் மதித்தார் என்று கூறிய தமிழிசை, கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதி ஆக முடியாமல் போனது இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயம் என்று குறிப்பிட்டார்.
கலாம் விஷன் மற்றும் கலாம் இலட்சியங்களுக்கு உருவம் கொடுப்பதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று ஆளுநர் கூறினார்.
அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு வந்த போது, மத்தியில் சோனியா தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக., தலைவர் கருணாநிதியும் அதனை முன்னின்று தடுத்தார்கள் என்பதும் கலாம் என்றால் கலகம் என்று கூறி கருணாநிதி அப்போது இழிவுபடுத்திக் கூறினார் என்பதும் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத இடம் பெற்றவை!