- விருதுநகர் அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட பார்…
- சீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ….
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ளது மத்தியசேனை. இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையின் அருகில் மது குடிப்பதற்கான பார் உள்ளது. வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும், பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இதனை கண்காணிக்க போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மத்தியசேனையில் உள்ள மதுக்கடையில் சட்ட விரோதமாக செயல்பட்ட பாரில், சீருடையுடன் இருக்கும் சிறப்பு எஸ்.ஐ ஒருவர் மது அருந்துவதும், அருகிலிருக்கும் இரண்டு நபர்கள் போலீஸ் இருக்கும் பயம் துளியும் இல்லாமல், நிதானமாக மது குடிப்பதை அங்கிருந்த ஒருவர் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீயாக பரவியது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியே, பாரில் மது அருந்தியது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட எஸ்.பி பெருமாள் கூறும் போது, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை