திருஞானசம்பந்தர் தேவாரத்தை இழிவுபடுத்திய சுந்தரவள்ளியை கைது செய்ய வேண்டும் என்று, சீர்காழி போலீஸில் இந்து மக்கள் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் சீர்காழி காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் ரசீது வழங்கியுள்ளனர்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…
சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் சீர்காழியில் அவதரித்தவர். தனது மூன்றாவது வயதில் சட்டநாத சுவாமி தேவஸ்தான திருக்குளக்கரையில் வாய் திறந்து அழுத அவரது குரலை கேட்டு அன்னை உமாதேவியே இறங்கி வந்து ஞானப்பால் ஊட்டியது வரலாறு.
3 வயதில் ஞானம் பெற்று 16 வயதில் முக்தியடைந்தவர்.386 திருத்தலங்களில் தேவாரம் அருளிய மகான்.முதல் திருமுறையில் 136 பதிகங்கள் 1429 பாடல்கள், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்கள் 1331 பாடல்கள், மூன்றாம் திருமுறையில் 125 பதிகங்கள் 1347 பாடல்கள் அருளியுள்ளார். தமிழும் சைவமும் தழைக்க நாள்தோறும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானக் குழந்தை திருஞானசம்பந்த பெருமான். ம
ுயலகன் நோய் தீர்த்தது , முத்து பந்தல் பெற்றது, படிக்காசு பெற்றது, நாளும் கோளும் நலம் பெற பாடியருளியது, அனல் வாதம் – புனல் வாதம் செய்து வென்றது , பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீக்கியது, சமணர்களை கழுவேற்றியது, ஆண் பனையை பெண் பனையாக்கியது, தனது திருமணத்திற்கு வந்தவர்களுடன் இறைவனடி சேர்ந்தது என பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர். தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் தமிழுக்கு சிறப்பு செய்தவர்.
தனது எந்தவொரு பாடலிலும் பெண்களை இழிவுபடுத்தி ஒரு சொல் கூட சொல்லாதவர். “பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ” என பெண்மையை போற்றியவர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருஞானசம்பந்த பெருமானை அவரது பாடல்களின் பொருள் தெரியாமல் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி என்பவர்.
இவர் ” கலாட்டா ” என்ற யூ டியூப் சேனலில் ஒளிபரப்பான ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசிய போது “திருப்பதிகங்களின் பத்தாவது பாடல்கள் அனைத்திலும் பிற மதங்களை சேர்ந்த பெண்களை கற்பழிக்க சொல்கிறார் திருஞானசம்பந்தர் ” என பேசியிருக்கிறார்.
திருமுறைகளின் எந்தவொரு பாடலிலும் அது போன்ற வரிகள் இடம்பெறவில்லை. மிகவும் தவறான உண்மைக்கு புறம்பான செய்தியை வேண்டுமென்ற திட்டமிட்டு பேசியிருக்கிறார் சுந்தரவள்ளி .
சுந்தரவள்ளியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்னைப் போன்ற சைவ சமய நம்பிக்கையுடைய கோடிக்கணக்கானோரின் மனங்களை புண்படுத்தியுள்ளார். தேவார திருப்பதிகங்களின் அர்த்தங்களை திட்டமிட்டு திரித்து தவறான கருத்துக்களை பதிவு செய்வதுடன் இந்துக்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி அவதூறாக தொடர்ந்து பேசி வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி என்பவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.