சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா கந்தசாமி இன்று காலை காலமானார் அவருக்கு வயது 80
அண்மைக் காலமாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த சா கந்தசாமி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். .
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இதய நோய் பிரச்னைகளால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார் இந்நிலையில் இன்று அதிகாலை 7 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.
தமிழ் படைப்பாளியாக தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்திக் கொண்ட சா. கந்தசாமி 1940ல் அன்றைய நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர்.
1968ல் இவர் எழுதிய சாயாவனம் நாவல் எழுத்துலகில் இவரை தனித்துவமாக அடையாளப் படுத்தியது. இந்த நாவலுக்காக தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது.
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது
1998ல் விசாரணைக் கமிசன் என்ற நாவலுக்காக இவருக்கு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மறைந்த சா.கந்தசாமிக்கு 2 மகன்கள் ஒரு மகள். இவர் தம் மனைவி ரோஹிணியுடன் சென்னை நந்தனத்தில் வசித்து வந்தார். மூத்த மகன் சரவணன் ஊடகத் துறையில் பணி செய்து வருகிறார்.
தற்போது, சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தவர். இந்திய திரைப்படத் துறையில் தணிக்கைக் குழுவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்.
இவரது இறுதிச் சடங்கு இன்று பெசன்ட் நகர் இடுகாட்டில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 9444043588 / 044 24335588