கொரோனாவால் உலகமே முடங்கி உள்ள நிலையில், பிறரிடம் யாசகம் பெற்று 7வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் இன்று (31.07.2020) வழங்கியுள்ளார், தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் எனும் 65 வயது முதியவர்!
முதன் முதலாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் கடந்த 18.05.2020 அன்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 வழங்கினார். பின்னர் தொடர்ந்து 7 முறை இது போல் ரூ. 10 ஆயிரமாக யாசகம் பெற்ற பணத்தை வழங்கினார். இதுவரை இவ்வாறு ரூ.70,000 மதுரைக்கான நிவாரண நிதியாக இவர் வழங்கியுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக ஊர் ஊராக யாசகம் எடுத்து வரும் பூல்பாண்டியன், தான் பெறும் யாசகப் பணத்தின் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.
குறிப்பாக குமரி முதல் காஷ்மீர் வரை 400 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.5,000 வீதம் என பிரித்துக் கொடுத்து அப்பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி மேசைகள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மும்பையில் ஒரே நாளில் 20,000 மரக் கன்றுகள் வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
தன் வாழ்வில் பெரும் பகுதியை யாசகம் பெற்றே வாழ்ந்துள்ள பூல்பாண்டியன், அந்தப் பணத்தை சுயமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல், அது ஏழை, எளிய மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்று பல்வேறு உதவிகள் செய்தார். எனினும், கொரோனா காலத்தில் ரூ.10,000 அவர் முதல் முறையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
தொடர்ந்து ஊக்கத்துடன், 7 முறை இதுபோல் ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 70 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியில் சேர்த்துள்ளார் பூல்பாண்டியன்!
- செய்தி: ரவிசந்திரன், மதுரை