பணியின்போது அரசு ஊழியர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவருடைய குடும்பத்தினர் உடனடியாகப் பலன் பெறும் வகையில் ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
ஓய்வூதிய விதிகள் 1972ன் 80-A என்ற பிரிவில் இத்திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஒரு அரசு ஊழியர் பணிக் காலத்தில் இறந்த பின், அவர் குடும்பத்திற்கான ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. சில சமயம் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும், அந்த அரசு ஊழியரின் மொத்தப் பணிக் காலத்தைப் பொறுத்து சில சமயம் இவை நிராகரிக்கவும் படுவதால், அக்குடும்பத்தினர் அவர்கள் மிகவும் நொந்து போகின்றனர்.
இதைத் தவிர்ப்பதற்காகவே இது தொடர்பான ஓய்வூதிய விதிகளைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியரின் மரணத்திற்குப் பின், ஓய்வூதியம் தொடர்பான Form-14, Form-18 உள்ளிட்ட படிவங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், இதற்காக மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளுக்கும் அவருடைய குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒருவேளை, அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான கிராஜுவிட்டி அளிக்கப்பட்டிருந்தாலும், அதை தவணை முறையில் அரசிடம் அவர்கள் திருப்பிச் செலுத்தினால் போதும்.