ஆடிப் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தடை உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் ,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப் படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க இம்மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுதும் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. எனினும் இன்று இஸ்லாமியர்களின் பக்ரீத் நாள் என்பதால், ஊரடங்கு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது.
கடந்த மாதம் முழுவதும் நோய் பரவலை தடுக்க அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதேபோல இந்த ஆகஸ்டு மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அதன்படி ஆக.2 நாளை மாநிலம் முழுதும் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனைகள் மருந்துக் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப் படும். காய்கறிக் கடை, மளிகைக் கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்!
வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல், முழு ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. எனினும், நாளை இந்துக்களின் முக்கியத் திருநாளான ஆடி 18ம் பெருக்கு என்பதால் தளர்வு அளிக்கப் பட வேண்டும் என்று இந்துக்கள் கோரியுள்ளனர்.