ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானதை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கும் லேசான தொற்று உள்ள நிலையில்,அவருக்கு ஆளுநர் மாளிகையிலேயே மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக தகவல் வெளியானது.
கடந்த 29ஆம் தேதி முதல் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா குறித்த சோதனை நடத்தப்பட்ட நிலையில் மாலை 5 மணிக்கு ஆளுநர் ராஜ்பவன் திரும்பினார். இதனிடையே காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் மருத்துவரீதியில் சீராக இருக்கிறார் என்றும் அவருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் ஆளுநர் மாளிகையில் தனிமையில் இருந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆளுநரை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் என்றும் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.