அயோத்தியில் அராபிய மத அன்னியர்களின் படையெடுப்பால் நிர்மூலமாக்கப்பட்ட ஸ்ரீராமபிரானின் ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்று எழப் போகிறது. இதற்காக நடைபெற்ற போராட்டங்கள், சிந்திய ரத்தங்கள், ஆகுதியாக்கப் பட்ட உயிர்கள் ஏராளம். இது 5 நூற்றாண்டு கடந்து வந்த போராட்ட வரலாறு.
கடந்த நூற்றாண்டில் எழுச்சி கண்ட அயோத்தி ராமபிரானின் திருக்கோயிலுக்கான போராட்டத்தில், 1990இல் லால்கிஷண் அத்வானி நடத்திய மாபெரும் ரத யாத்திரை, நாட்டு மக்களின் மனத்தில் பெரும் உத்வேகம் ஊட்டியது. அந்த மா மனிதர், இப்போது தமது கண்களாலேயே தாம் வாழும் காலத்திலேயே அந்தத் திருக்கோயிலுக்கான பூமிபூஜையை காணும் பேறு பெற்றிருக்கிறார். அதே நேரம், அந்த ரத யாத்திரியில் அத்வானியுடன் பங்கு பெற்று பின்னணியில் நின்று கொண்டிருந்த நரேந்திர மோடி எனும் மனிதர், தாம் மனத்தில் கொண்ட வைராக்கியத்தால், 30 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்து, இப்போது பூமிபூஜைக்கான அடிக்கல் நாட்டும் பாக்கியம் பெற்று சாதித்திருக்கிறார். இது ராமனின் அருள் அவருக்கு இருப்பதையே வெளிப்படுத்துவதாக மக்கள் சிலிர்ப்பு அடைகின்றனர்.
பகவான் ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோயில் பணிகளில் மோடி தவறாமல் பங்கேற்றுள்ளார். பாஜக., மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தார் மோடி.
1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போது அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர் என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் செய்தியாளர்கள் அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள் எனக் கேட்டனர். அதற்கு அவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன் என்றார். அந்த வைராக்கியத்தின் படி, தாம் மனத்தில் கொண்ட சங்கல்பத்தின் படி, இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் பிரதமர் மோடி ராம பக்தர் ஆஞ்சநேயரை முதலில் வழிபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமரை வணங்கும் முன் ராம பக்தரை வழிபட்டு விட்டு ராம ஜென்ம பூமிக்குப் புறப்படுகிறார்.
பிரதமர் மோடி அங்கே குழந்தை ராமரை வழிபடுகிறார். அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 3 மணி நேரம் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான இடங்களில் வண்ண விளக்குகள், தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாதுகாப்பு குறியீடு அழைப்பிதழ் வழங்கப்பட்ட 175 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 135 பேர் ஆன்மிகத் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.35 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் பிரதமர் 10.35 மணிக்கு லக்னோ வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வரவுள்ளார். இதற்காக சரயு நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு கல்லூரியில் தற்காலிக ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து நேராக அனுமன்கரி கோயிலுக்குச் செல்லும் மோடி அங்கு 10 நிமிடங்கள் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிறகுதான் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதையை சிறைஎடுத்துச் சென்ற ராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்பும் ராமர் அனுமனுக்கு அயோத்தியில் ஒரு இடம் கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன்கரி என அழைக்கப்படுகிறது. ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெறுவதால் அனுமன் கோவிலிலும் திங்கட்கிழமை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அனுமரை வழிபட்ட பின்னர் ராமஜென்ம பூமிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு குழந்தை ராமரை வழிபடுகிறார். பின்னர் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டு விழாவின் போது பிரதமருடன் மேடையில் இருக்க 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் ஸ்ரீராமஜன்ம பூமி பூஜை ஆலய அடிக்கல் நாட்டு விழாவைக் காண வசதியாக, தொலைக்காட்சிகள், இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:
- காலை 9.35 மணி: பிரதமர் மோடி தில்லியிலிருந்து புறப்படுகிறார்.
- 10.35 மணி: உ.பி., மாநிலம் லக்னோ வருகை தருகிறார்.
- 11.30 மணி : அயோத்தி – சகேத் கல்லூரியிலுள்ள ஹெலிபேடுக்கு அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் வந்தடையும்.
- 11.30 மணி : ஹனுமன்கர்ஹியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜை நடத்துகின்றனர்.
- மதியம் 12 மணி: ராம ஜென்மபூமிக்கு வருகை. ராம் லல்லா விராஜ்மனில் சிறப்பு பூஜை.
- 12.15 மணி: பிரதமர் மோடி, பாரிஜாத மரக்கன்று நடுகிறார்
- 12.30 மணி: ராமர் கோவில் பூமி பூஜை விழா துவக்கம்
- 12.40 மணி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- 2.20 மணி: லக்னோ புறப்படுகிறார் பிரதமர் மோடி.