500 ஆண்டுகாலப் போராட்டம்… மீண்டும் எழும் ராமர் கோயில்! பூமிபூஜை செய்த பிரதமர் மோடி!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில், ராமர் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை கருவறை அமையும் இடத்தில் வைத்து பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி பூஜை செய்து, பின்னர் கூட்டத்தில் பேசினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதை அடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தது.
தொடர்ந்து, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதை அடுத்து, அயோத்தி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு பூமி பூஜைக்கான சடங்குகள் அயோத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வந்தனர். இன்று காலை 8:00 மணி முதல் அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று காலை 9: 30க்கு சிறப்பு விமானத்தில் லக்னோ சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார். அவரை, உ.பி., முதல்வர் யோகி. ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் கார் மூலம் ஹனுமன்கர்கி கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கே சிறப்பு வழிபாடுகளைச் செய்தார்.
பின்னர் கடவுள் ராமர் பிறந்த இடத்துக்குச் சென்று பூஜை செய்து வழிபட்டார். அங்கே மரக்கன்று நட்டு நீர் ஊற்றினார். பின்னர், ராம ஜன்மபூமிக்குச் சென்றார். பகல் 12: 40க்கு கோவில் கருவறை அமையவுள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார். பூமி பூஜைக்காக 2 ஆயிரம் கோயில்களில் இருந்து புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டன. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜைகளைத் தானே செய்தார் பிரதமர் மோடி. ராமரின் கோயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் மோடி. அதுபோல் பூமிபூஜை நடைபெற்ற இடத்திலும், உடல் தரையில் படும்படி விழுந்து வணங்கினார்.
இந்த நிகழ்வில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பிமாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராம் பாகவத் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.