நாளை மாலை அனைவர் வீடுகளிலும் விளக்கு ஏற்றி, மாலை நேரத்தில் சஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர்.
அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…
தமிழ் கடவுள் முருகப் பெருமானிடம் தன் நோய் தீர வேண்டும் என வேண்டி தன் குறைகளை பாலதேவராய சுவாமிகள், மனமுருகி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் பாடியது உள்ளத்தையும் உடலையும் காக்கும் கவசம்.
இந்த கந்த சஷ்டி கவசத்தை சில கயவர்கள் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முருக பக்தர்கள் விசாகம், பூசம், உத்திரம், சஷ்டி என முக்கிய நாட்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளிலும் கந்த சஷ்டி கவசத்தை பாடி தங்கள் குறைகளை தீர்க்க முருகப் பெருமானிடம் வேண்டி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
அப்படிப்பட்ட புனித கவசத்தை கோடிக்கணக்கான மக்களின் உணர்வை புண்படுத்திய அந்த கயவர்கள் சிலரை கைது செய்து இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றது. இது சம்பந்தமாக அத்தனை மடாதிபதிகள் துறவியர் மற்றும் ஆதினங்கள் வேண்டுகோளின்படி நாளை நாம் அத்தனை பேரும் நம் வீட்டின் வாசலில் காலை கோலத்தால் வேல்படம் போட்டு மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி நம் வீட்டின் வாசலில் சமூக ஒற்றுமையோடு தனிநபர் இடைவெளி கடைபிடித்து கந்த சஷ்டி கவசத்தை பாடி நம் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.
இனிமேல் எவரும் நம் கடவுள்களை இழிவுபடுத்தாத நிலையை ஏற்படுத்த நாம் அனைவரும் நாளை நடக்க உள்ள நிகழ்வை பயன்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
தாயார் ஆண்டாள் திருப்பாவையில் கூறியதுபோல் கூடியிருந்து குளிர்வோம்! இந்து கடவுள்களை இழிவு படுத்தும் கயவர்களின் போக்கை முறியடிப்போம். ஜெய் ஜெய் ராமானுஜா என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்!