தனியார் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு சார்பில் கரிமேடு காவல்நிலையத்தில் புகார்.
மதுரை கரிமேடு பகுதியில் இயங்கிவரும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் அப்பகுதி மகளிர் சுய உதவி குழு சார்பில் 150 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் , கடன் பெற்று அதனை வார தவணையாகவும், மாத தவணையாகவும் செலுத்தி வந்தனர்.
தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் தினக்கூலிக்கு செல்லும் பெண்கள் தவணை தொகையை கட்ட முடியாத நிலையில் தற்போது அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை கரிமேடு காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்பு இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில் தாங்கள் பெற்ற கடன் தொகையை உடனடியாக செலுத்தும்படி தகாத வார்த்தையில் திட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை