திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது ட்விட்டர் பதிவில் மொழிப் பிரச்சினையை கிளப்பி இருந்தார் எனக்கு இந்தி தெரியாது என்பதால் தான் இந்தியர் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்
தம்மிடம் சிஐஎஸ்எஃப் அலுவலர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்ட புகார் குறித்து, விசாரணை நடத்தப்படும் என சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறியதற்காக, “நீங்கள் இந்தியரா” என பெண் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் தம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியதாக கனிமொழி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சி.ஐ.எஸ்.எஃப், சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் எந்த ஒரு மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இன்று விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசுமாறு கூறினேன். அதற்கு அவர் “நீங்கள் இந்தியரா”? என்று வினவினார். எப்போதிலிருந்து ஹிந்தி என்றால் இந்தியா என்ற நிலை ஏற்பட்டது என அறிய விழைகிறேன் : கனிமொழி.
இதற்கு தான் மும்மொழி கொள்கை தேவை என்கிறோம். அவருக்கு அந்நிய ஆங்கில மொழி தெரியாததால் எவ்வளவு சிரமம் உங்களுக்கு? ஒரு வேலை மும்மொழி கொள்கையை உங்கள் கூட்டணி காங்கிரஸ் அரசுகள் கடைபிடித்திருந்தால் இந்த நிலை உங்களுக்கு வந்திருக்காது. தற்போதைய மத்திய பாஜக அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் ஹிந்தியை தாயமொழியாக கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் தமிழ் கற்க, பேச வாய்ப்பு உருவாகுமே. எதிர்மறை அரசியலை கைவிட்டு, நேர்மறை அரசியலை முன்னெடுங்கள்.
மத்தியில் தி மு க 15 வருடங்கள் ஆட்சியில் இருந்த போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் தமிழ் தெரியுமா? ஆட்சியில் இருந்த போது தமிழ் கண்களை மறைத்த ஹிந்தி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ் கண்களை திறக்கிறதோ? ஆட்சியில் இருந்த போது ‘கனிமொழி’ க்கு கனிவாக இருந்த ஹிந்தி, எதிர்க்கட்சியாக உள்ளபோது கனலாக காய்கிறதோ? மலிவான மொழி அரசியலின் உண்மை முகம்.
- நாராயணன் திருப்பதி.
இன்று வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்துடன் ஆதீனங்கள் இந்து சமய பெரியோர்கள் இந்து இயக்கங்கள் ஆதரவுடன் வேல் பூஜை, கந்த சஷ்டி கவச பாராயணம் குறித்து பிரசாரம் செய்து வந்த நிலையில், அதனை மறைப்பதற்காக இந்து விரோத திமுக., என்று பெயர் எடுத்துள்ள திமுக.,வின் கனிமொழி மீண்டும் ஒரு முறை அதனை மெய்ப்பிக்கும் வகையில், டிவிட்டர் பதிவில் மொழிப் பிரச்னையைப் பதிவிட்டு, திசை திருப்ப முயன்றார். ஆனாலும், தமிழ்க் கடவுள் முருகனே இந்த பிரசாரக் களத்தில் வென்றிருக்கிறார்.