திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையை சேர்ந்தவர் முருகன். பூக்கடை நடத்தி வரும் இவருக்கும் மோகன பிரியா என்ற பெண்ணிற்கும் ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாள் முதல் மோகன பிரியாவை முருகனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். அதோடு வேறு ஒரு பெண்ணுடன் முருகனுக்கு தொடர்பு இருந்ததால் மனைவி மோகன பிரியாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மோகன பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் சமரசம் செய்து முருகன் குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்று மாலை மோகன பிரியா பெற்றோருக்கு அவரது கணவர் குடும்பத்தினர் போன் மூலம் அழைத்து அவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக அவர்களை வரவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் விரைந்து சென்ற போது வீட்டில் மோகன பிரியாவை அடக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தங்கள் மகளின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததாகவும், முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து மோகன பிரியாவை கொலை செய்து விட்டதாகவும் தற்போது தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.