தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மீண்டும் மண்டலத்துக்கு இடையே போக்குவரத்து சேவை துவங்கப்பட்டது.
அப்போது, அதிக அளவில் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துவங்கியதும், ஒரு சில இடங்களில் கூட்டம், கூட்டமாக பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்தனர். ஆகையால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர், கூட்டமாக ஏறவேண்டாமென கூறியதால் பொதுமக்கள் அவர்களிடம் சண்டையிட்டனர்.
மேலும், ஒரு சில இடங்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கவும் செய்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மண்டலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையால் கொரோனா தொற்று அதிகமானதாக கருதப்பட்டது. அதையடுத்து தமிழகம் முழுவதும் முற்றிலுமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
பொது போக்குவரத்து இயக்கப்படாததால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியது. வெளியூர்களுக்கு சென்று வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் பேருந்து சேவை இல்லாததால், வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.