மலேசியாவில் வடக்கே பெர்லிஸ் மகாணத்தில் இருந்து தெற்கே ஜொகூர் வரையும் பல்லாயிரம் பக்தர்கள் கந்தர் சஷ்டி பாரயணங்களை செய்தனர். உலகளாவிய முருக பக்தர்களின் ஆராதனைக்குரியதும் முருகவேளின் அகில உலக ஞானச்சின்னமாக 140 அடி உயரத்தில் விளங்கும் முருகப் பெருமானின் பத்துமலையை பக்திமலை என அழைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உலகம் முழுவதும் கந்த சஷ்டி கவசம் என்ற நிகழ்ச்சிக்கு கோவை சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தலைமையில் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை மலேசிய முருக பக்தி பேரவை ஒருங்கிணைத்திருந்தது.
மலேசியாவில் ஆக.9ம் தேதி அன்று காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், அர்த்த ஞான சபை ஆகியவற்றின் பங்கேற்பில், மலேசியாவில் உள்ள ஒன்பது திருக்கோவில்களில் வேல்பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அலோர்ஸ்டார் நாட்டுகோட்டை செட்டியார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஜாவீ நாட்டுகோட்டை செட்டியார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், சுங்குரும்பாய் நாட்டுகோட்டை செட்டியார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், பினாங்கு நாட்டுகோட்டை செட்டியார் தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ நாட்டுகோட்டை செட்டியார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், சுங்கைவே திருமுருகன் ஆலயம், மாசாய் ஜோகூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், அருள்மிகு மயுரநாதர் பாம்பன் சுவாமிகள் ஆலயம் (டெங்கில், சிலாங்கூர்) ஆகிய ஆலயங்களில் காலையிலும், ஆறுமுக ஸ்வாமி தேவஸ்தானம் (கங்கார், பெர்லிஸ்) ஆலயத்தில் மாலையிலும் சிறப்பு கந்த சஷ்டி பாராயணம், வேல் அபிஷேகம், பூஜை ஆகியவை நடைபெற்றன.
மலேசியாவின் தாய்க்கோவில் எனப் போற்றப்படும் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும் அறங்காவலருமான திருப்பணிச்செம்மல் டான்ஶ்ரீ டத்தோ நடராஜாவின் சிறப்பான ஏற்பாட்டில் கந்தர் சஷ்டிப் பாராயணப் பெருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பரவசமாக பங்குபெற்றனர்.
இது குறித்து, மலேசியாவின் திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் அதிபதி தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள் குறிப்பிட்ட போது…
முருகப் பெருமானின் உருவத்தைப் போல வேலை வணங்குகிறோம். சுமார் 120 ஆண்டுகள் பட்டு குகைகளில் உள்ள வேல், முருக வழிபாட்டை நிகர்த்தது. பட்டு குகை மற்றும் நமது கந்தக் கடவுள் முருகனின் கம்பீரமான விஸ்வரூபம், பட்டு மலையை பக்தி மலை ஆக்கியுள்ளது.
கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் ஆகியிருக்கும். அது முருகனைப் பற்றிய எண்ணற்ற பக்தி பாடல்களுடன் இணைந்துள்ளது.
கந்த சஷ்டி கவசம் நம் ஆன்மாவைப் பற்றி கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் உள்ளடக்கியது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், நம் வாழ்க்கை, நம் உணர்ச்சிகள், நம் மகிழ்ச்சி, துக்கம், சாத்தியக்கூறுகள், நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை வழங்குகிறது. அனைத்து விதமான ஆபத்துகள், எதிர்மறை எண்ணங்கள், தீங்குகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
முருகப் பெருமானைப் போற்றி எண்ணற்ற பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்தக் குறிப்பிட்ட கவசத்தைப் பாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் எல்லா இடங்களிலும் பொழிவதற்கு உதவுகின்ற தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ டத்துக் ஆர்.நடராஜாவின் அயராத முயற்சிகளுக்கு நன்றி.
இந்த முதல் வேல் பூஜையை (2020) நடத்த துணைநின்ற கோலாலம்பூர் ஸ்ரீ மகா மரியம்மன் கோயில் தேவஸ்தானம், புனித கந்த சஷ்டி கவசம் மீதான நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கையை உலகுக்குக் காண்பித்ததற்காக வாழ்த்துகிறேன். ‘ – என்று மலேசிய நாட்டின் வேல் பூஜை குறித்து, திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவத்திரு பாலயோகி சுவாமிகள் குறிப்பிட்டார்.
மேலும், இன்று முருகனின் கந்த சஷ்டி கவசத்துக்கு ஒரு நாள்… என்று குறிப்பிட்ட அவர், ஞாயிறு மாலை 4 மணி முதல் 140 அடி உயரம் கொண்ட பட்டு மலை முருகப் பெருமானின் பாத பூஜையுடன் விழாக்கள் தொடங்கியதையும், தொடர்ந்து ஸ்ரீவேலாயுத சுவாமி பிரதான கோவிலில் மஹா அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடத்தப் பட்டதையும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.