ஒரு திட்டத்தை மேடையில் துவக்கி வைக்கலாம்.. அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கலாம். யாராவது கடலுக்குள் போய் துவக்கி வைப்பார்களா? நம்ம அமைச்சர் ஜெயக்குமார் அப்படி ஒரு ரிஸ்க் தான் எடுத்திருக்கிறார். கடலுக்குள் படகிலேயே சென்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்!
எப்பவுமே அமைச்சர் ஜெயக்குமார் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டிருப்பார். திடீரென்று பாடுவார், திடீரென்று கவிதை எழுதுவார், தடாலடியான ஒரு சிங்ககுட்டியை தூக்கி வைத்து கொஞ்சுவார்.
ஜிம்னாஸ்டிக் செய்வார். பந்து எடுத்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவார். அதுமட்டுமல்ல, துறை வாரியாக எந்த கேள்வி கேட்டாலும் டான். டான் என்று பதில் சொல்லி திணறடிப்பார்.
தற்போது மீன்வளத்துறை நடவடிக்கைகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளார்.
இதற்கு காரணம், கடல் பகுதிகளில் முன்பு மீன்கள் அதிக அளவில் காணப்பட்டன. ஆனால், கழிவுகளை கடலில் கலப்பது போன்ற காரணங்களால், கொஞ்ச காலமாக கடல் பகுதிகளில் மீன்கள் இனம் குறைந்து வருகிறது… நம்ம கடலை பொறுத்தவரை 200 வருஷத்துக்கு தேவையான மீன்வளம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கும்போது, ஆழ்கடலை ஊக்குவித்தால் அது மீனவர்கள் வாழ்வுக்கு உபயோகமாக இருக்கும் என்று மத்திய-மாநில அரசுகள் நினைக்கின்றன. அதனால்தான், விசைப்படகுகளையும் தாராளமாக வழங்கி ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் அமைச்சர் ஜெயக்குமார் இறங்கி உள்ளார்.
அதில் ஒன்றுதான் செயற்கை பவளப்பாறைகள் திட்டம்.. அதாவது சிமெண்ட்டால் செய்யக்கூடிய, துளையுடன் கூடியது இந்த கான்க்ரீட் கற்கள். இதை கடலுக்குள் கொண்டு போய் போட்டுவிட்டால், அடுத்த 6 மாசத்தில் மீன்களுக்கு தேவையான கடல் பாசிகள், அந்த கற்களில் படிந்து வளர ஆரம்பிக்கும்… பிறகு அந்த பாசியை சாப்பிட சிறு உயிரினங்கள், அதைச் சாப்பிட மீன்கள் என்று ஒரு பெரிய உணவுச் சங்கிலி அங்கே உருவாகும். அந்த மீனை நம் மீனவர்கள் பிடிக்க எளிதாக இருக்கும்.
பாசி படரும்போது, பாறை மீன், கொடுவா மீன் போன்ற மீன்கள் அதிகரிக்கும். அதனால்தான் இந்த செயற்கை பவள பாறையை உருவாக்க மீன்வளத்துறை முயன்றுள்ளது. கடல் பகுதி மீன் பிடிப்பால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் உயரும் என்பதே அமைச்சரின் நோக்கம் ஆகும்.
அதுமட்டுமல்ல, எண்ணூரில் கப்பல்கள் மோதி கொண்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் மீன்வளம் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதனால், அவைகளை சீர் செய்து மீனவர் நலனை மேம்படுத்திட ரூ.10 கோடி மதிப்பீட்டில் 30 இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவி மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.
அதன்படியே, கான்கிரீட்டால் ஆன முக்கோணம், வளையம், மற்றும் வளைய தொகுப்புகள் ஆகிய 3 வடிவங்களில் செயற்கை பவளப்பாறை உருவாக்கப்பட்டு மீன் உறைவிடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை கடலில் நிறுவும் நிகழ்ச்சி தான் தற்போது நடந்தது. அது நடந்த இடம் எங்கு தெரியுமா? ஊரூர்குப்பம், ஆல்காட்டுகுப்பம், ஓடைக்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியாகும்.
ஒரு படகில் ஏறி சற்று தூரம் சென்று கொடியசைத்து திட்டத்தை தொடங்கி வைத்தால் போதும் என்று பத்திரிகை நண்பர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அமைச்சருக்கோ அதில் இஷ்டம் இல்லை.. நடுக்கடலில் 300 டன் எடை தாங்கக்கூடிய பெரிய படகு (அதாவது கோட்டியா என்று சொல்வார்கள்), அதில்ஏறிதான் திட்டத்தை தொடங்கி வைப்பேன் என்கிறார்.. அது ஆபத்தான இடம், வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அமைச்சர் விடுவதாக இல்லை.
அங்குதான் வருவேன், அங்கிருந்துதான் திட்டத்தை தொடங்கிவைப்பேன், மீனவர்களுக்கு இது ஒரு உந்துதலாக இருக்கும் என்று சொல்லி கொண்டே படகில் கிளம்புகிறார்.. அவர் செல்லும் இடம் கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. இதற்கு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் படகில் செல்ல வேண்டும்.
அப்படித்தான் ஒரு படகில் ஏறி அங்கு சென்றார். 5 மணி நேர படகு பயணம் அது.. மொத்தம் 4 படகுகளில் அமைச்சர் உட்பட பலரும் கிளம்பி சென்றனர். தான் வந்த படகில் இருந்து, நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, படகிற்கு அமைச்சர் ஒரே தாவாக தாவினார்.. ஒரு படகில் இருந்து இன்னொரு படகுக்கு ஜம்ப் ஆகுவது என்பது ரொம்பவே ரிஸ்க் ஆன விஷயம்.. இதை பார்த்ததும் அங்கிருந்தோருக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரிப்போட்டது.
காற்று பலமாக அடித்து கொண்டிருக்கிறது.. படகுகள் சுற்றி சூழ, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டாலும் ஆபத்துதான்.. கடலுக்குள் சென்று அந்த திட்டத்தை அமைச்சர் தொடங்கியும் வைத்தார்.. இது ரொம்பவும் ஆபத்தானது.. கொஞ்சம் பிசகினாலும் அது ரிஸ்க்தான்.
“மீனவர் வாழ்வு எவ்வளவு துயர் நிறைந்ததை என்பதை நீங்க எல்லாரும் பார்க்கணும். தெரிஞ்சுக்கணும். ஏதோ அவங்க கடலுக்கு போறாங்க, வலையை வீசறாங்க, மீன் பிடிக்கிறாங்கன்னு நினைச்சிடக்கூடாது, அவங்க எவ்வளவு ஆபத்தில், சவால்களுடன் மீன் பிடிக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று ஒரு நீண்ட விளக்கத்தையும் அமைச்சர் தரவும், அங்கிருந்தோர் ஆச்சரியம் விலகாமல் ஜெயக்குமாரையே பார்த்து கொண்டு நின்றனர்.
மீன் வளத்தை பெருக்குவதற்காகவே, செயற்கையாக பவளப்பாறைகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு, மறுபடியும் படகிலேயே வந்து கரை சேர்ந்தார் இந்த “தில்” அமைச்சர். இவர் துவங்கி வைத்துள்ள, செயற்கை பவளபாறைகளை உற்பத்தி செய்திருப்பதால், அடுத்த 15 வருஷத்தில் அபாரமாக மீன்வளம் பெருகும்.. மீனவர் வாழ்வு செரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.