ஒடிசாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியத்தால் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த, நிரஞ்சன் பெஹெரா- கீதா பெஹெரா தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தை, வயிற்றுப்போக்கு காரணமாக பாரிபாடா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. முதல் கட்ட சிகிச்சைக்கு பின் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்சில் நிரஞ்சனும், அவரது மனைவியுடன் குழந்தையுடன் புறப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் மருத்துவ உதவியாளரும் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்று விட்டனர்.
விரைவாக திரும்பி விடுவதாக கூறிச் சென்ற நிலையில், ஒன்றரை மணி நேரம் கழித்தே அவர்கள் திரும்பியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதற்குள் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து வழியிலேயே சுகாதார மையத்தில் குழந்தையை அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், அருகில் இருந்தவர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும், உதவியாளரையும் தாக்கினர். மேலும் இருவர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதிய உணவுக்காக 20 நிமிடங்கள் மட்டுமே வாகனத்தை நிறுத்தியதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கமளித்துள்ளார்.