சென்னை ஆதம்பாக்கம், மகாலட்சுமி நகர், 13-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (65). இவர், ரயில்வேயில் சீனியர் கிளார்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி லட்சுமி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், 2 மகள்கள். இளைய மகள் அக்சயா (29). பி.காம் படித்துள்ளார். அக்சயாவுக்கும் புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த குருபிரசாத்துக்கும் 3.6.2020-ல் திருமணம் நடந்தது. குருபிரசாத், தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்குப்பிறகு சீனிவாச நகரில் உள்ள காயத்திரி தெருவில் அக்சயா குடியிருந்தார்.
ஆடி மாதம் என்பதால் அக்சயாவை, சந்தானம் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில் 9-ம் தேதி இரவு அக்சயா படுக்கையறைக்குச் சென்றார். 10-ம் தேதி காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த சந்தானம், லட்சுமி ஆகியோர் கதவைத் தட்டினர். பதில் வரவில்லை. இதனால் தன்னுடைய மகன் மோகனுக்கு சந்தானம் போனில் தகவல் தெரிவித்தார்.
பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அக்சயா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீஸார், அக்சயாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்சயாவின் தற்கொலை குறித்து இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 174 (3) -ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 66 நாள்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சந்தானம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், `எனது மகள் அக்சயாவுக்கும் குருபிரசாத்துக்கும் 27.3.2020-ல் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கோவிட் 19 காரணமாக திருமணம் 3.6.2020-ல் நடந்தது. கணவர் வீட்டில் சந்தோஷமாகவே வாழ்வதாக எங்களிடம் அக்சயா கூறியிருந்தாள்.
மேலும், மருமகன் மகளை நன்றாகவே கவனித்து வருவதாக அக்சயா கூறினாள். ஜூலை 13-ம் தேதி ஆடி மாதத்திற்காக அவளை எங்கள் வீட்டிக்கு அழைத்து வந்திருந்தோம். எனது மகளுக்கு மருமகன், அவரது வீட்டில் உள்ளவர்களால் எந்தவித தொந்தரவும் கிடையாது. வரதட்சணை சம்பந்தமாக எந்த பிரச்னையும் இல்லை.
எனது மகள் மிகவும் ஒல்லியாகவும், உடல் நலம் குன்றியவாறு இருப்பாள். குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உடல் ஆரோக்கியமின்மையே தற்கொலைக்கு காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணமாகி 2 மாதங்கள் கடந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.