உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தின் சவுதா பகுதியை சேர்ந்தவர் ராம்ஸ்வரூப். 65 வயதாகும் இவர், தனது மகன்களான முகேஷ் மற்றும் நவீனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை ராம்ஸ்வரூப்பின் மனைவி மற்றும் முகேஷ் இருவரும் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் ராம்ஸ்வரூப் மற்றும் அவரது மகன் நவீன் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது குறட்டை விடாதீர்கள் என்று ராம்ஸ்வரூப்பிடம் நவீன் கூறியதாக தெரிகிறது. அதனை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், ராம்ஸ்வரூப்பை கட்டையால் நவீன் தாக்கியுள்ளார்.
இதில் மயக்கமடைந்த ராம்ஸ்வரூப் கீழே விழுந்துள்ளார். அதனை அடுத்து, பயத்தில் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டார் நவீன். சம்பவம் அறிந்து வீட்டிற்கு வந்த முகேஷ், மயக்கமடைந்த நிலையில், கீழே விழுந்திருந்த தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தையைத் தாக்கி கொலை செய்தது தொடர்பாக நவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அப்பகுதி காவல்துறை அதிகாரி, “தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். கட்டையை வைத்து தொடர்ந்து தாக்கியதால் ராம்ஸ்வரூப் உயிரிழந்துள்ளார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நவீனை தேடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.