கொரோனா வைரஸ் தொற்று தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,977 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உச்சபட்சமாக சென்னையில் 1,11,054 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
பத்தாயிரம் எண்ணிக்கையை கடந்த மாவட்டங்களாக செங்கல்பட்டு 18,735, திருவள்ளூர் 17,706, காஞ்சிபுரம் 12,470, மதுரை 12,195, விருதுநகர் 10,977 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தென்மாவட்டங்களில் மதுரை, விருதுநகருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் 9469, தேனி 8554, திருநெல்வேலி 6801, கன்னியாகுமரி 6746, திண்டுக்கல் 4204, ராமநாதபுரம் 3719, சிவகங்கை 3053 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு ,பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதுதான் காரணமாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் எடுக்கப்படும் மாதிரிகள் மதுரை, திருநெல்வேலி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மதுரை தனியார் பரிசோதனை மையங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது.
சோதனை முடிவுகள் அறிவிக்க குறைந்தது ஐந்து நாட்கள் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த நபர்கள் இயல்பாக வெளியில் நடமாடுவதால், பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது என மருத்துவக்குழுவினர் கூறுகின்றனர்.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக் கூடங்களை அதிகப்படுத்தி, சோதனை முடிவுகளை விரைவு படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ரவிச்சந்திரன், மதுரை