தெய்வத் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் எம்.டி.கோபாலரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை
வரவேற்பதாகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், மத்திய அசின் புதிய கல்விக்கொள்கையில் தொடக்கக் கல்வி, தாய் மொழி கல்வியாக நடைமுறைப்படுத்துவதை தெய்வத் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது.
தாய் மொழி வழிக் கல்வியே நம்மை உயர்த்தும், அதிலும் தொடக்கக் கல்வி தாய்மொழி வழியில் இருப்பது மிகவும் அவசியமானது. தாய்மொழியில் கல்வி பயிலும் பல நாடுகள் அதற்கு உதாரணமாக இருக்கின்றன. நமது தமிழ்நாட்டிலும் மேதகு அப்துல்கலாம் துவங்கி, தற்போது இஸ்ரோவின் தலைமைப் பதவியிலிருக்கும் சிவன் ஆகியோர் வரை பலரும் தாய்மொழி வழி கல்வியில் பயின்றவர்களே.
தாய் மொழியிலேயே நமது மூளை சிந்திக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தாய் மொழி வழி கல்வியால் மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் பிறக்கும், இடைநிற்றல் முற்றிலும் இல்லாமல் போகும்.
`உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க, பள்ளிக் கல்வியோடு தொழிற் கல்வியும் அளிக்கும் திட்டம் இதில் அமைந்துள்ளது. தொழில் நுணுக்கம் பெறுவதால், மாணவ பருவத்திலேயே ஆராய்ச்சி கண்ணோட்டம் பெருமளவில் ஏற்படும்.
முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம், அதுவும் இலவசமாக அளிக்க பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் பலவகையான பள்ளி கல்வி வாரியங்கள் இருப்பது, பாரபட்சமானது. இது களையப்பட்டு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒரே மாதிரியான கல்வி திட்டம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதனால், நாட்டில் எவ்விடம் சென்றாலும் கல்வியின் தரம், பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும். இதனால், மாணவர்கள் குழப்பம் இல்லாமல் உயர்கல்வி பயில முடியும்.
நாடு சுதந்திரம் அடைந்து இதுவரை கல்வித் துறையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்த குறையைப் போக்கி, தற்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்திருப்பதை தெய்வத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.