என் தந்தை இன்னமும் தீவிர சிகிச்சையில் தான் இருக்கிறார் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் தில்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் ரெபரல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் மூளையில் ரத்தக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல் நிலையை கருதி 10ஆம் தேதி மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்த மருத்துவர்கள், வென்டிலேட்டர் உதவியுடன் அவரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
கோமா நிலைக்கு சென்றாலும், பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகள் வேலை செய்வதாகவும், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை நிலையாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் பிரணாப்முகர்ஜி குறித்து வதந்தி பரவியது இதை உண்மை என நினைத்து ஊடகத்தினர் சிலரும் ட்விட்டர் பதிவில் பகிர்ந்தனர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னமும் என் தந்தை தீவிர சிகிச்சையில் தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்
மேலும், தரமான ஊடகத்தினர் என்று நம்பக்கூடிய சிலரே இவ்வாறு பொய்ச் செய்திகளைப் பரப்புவது, இந்திய ஊடகங்கள் பொய்ச் செய்திகளைப் புனைந்து பரப்பு தொழிலகங்கள் என்று காட்டுகின்றன எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.